நல்லெண்ணத்துடனே செயல்பட்டாராம் சுஷ்மா.. வக்காலத்து வாங்கும் அருண் ஜெட்லி!
டெல்லி: ஊழல் வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நல்லெண்ணத்துடனே உதவியதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முறைகேடு, சூதாட்டப் புகார் ஆகியவற்றில் சிக்கிய லலித் மோடி, வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக, 2010-ஆம் ஆண்டில் இருந்து லண்டனில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், போர்ச்சுகலில் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் அவரது மனைவியைப் பார்க்கச் செல்வதற்காக, அவருக்கு விசா வழங்க உதவுமாறு பிரிட்டன் எம்பிக்களிடம் மத்திய அமைச்சர் சுஷ்மா பேசி, உதவி செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முறைகேடு, ஊழல் புகாரில் சிக்கியவருக்கு உதவி செய்ததால் சுஷ்மா ஸ்வராஜ் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதே உதவியை பிற குற்றவாளிகளும் எதிர்ப்பார்த்தால் மத்திய அமைச்சர்கள் செய்வார்களா என்று காங்கிரஸ் கேட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெட்லி, "லலித் மோடி விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீது கூறப்படும் அனைத்துப் புகார்களும் அடிப்படையற்றவை. இதில், சுஷ்மாவின் செயல்பாடுகள் அனைத்தும் நல்ல நோக்கத்துடனும், நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளன.
மத்திய அமைச்சரவையில் பல்வேறு துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்களுக்கு, சொந்தமாக முடிவெடுக்கும் திறன் உள்ளது. அதேபோல், அரசு எடுக்கும் முடிவுகளில் அனைத்து அமைச்சர்களுக்கும் பொறுப்பு உள்ளது.
லலித் மோடிக்கு பாஸ்போர்ட்டை திரும்ப அளிக்கும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வது குறித்து அரசு முடிவெடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் பாஸ்போர்ட் அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லலித் மோடி மீதான முறைகேடுப் புகார்கள் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
அவருக்கு எதிரான 16 புகார்களில் 15 புகார்கள் தொடர்பாக அவருக்கு அமலாக்கத் துறை பல்வேறு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது," என்றார்.
மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், நிதின் கட்கரி ஆகியோரும் இந்த விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
லலித் மோடி விவகாரம் அம்பலத்துக்கு வந்து சுஷ்மா ஸ்வராஜுக்கு நெருக்கடி ஏற்படக் காரணமே அருண் ஜெட்லிதான் என்று ஒரு கருத்து நிலவும் நிலையில், சுஷ்மாவுக்கு ஆதரவாக அருண் ஜெட்லி வாய் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.