13/7 மும்பை குண்டுவெடிப்புகள் நடத்த பணம் கொடுத்த மதீன் கோவா ஏர்போர்ட்டில் கைது
பனாஜி: 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பணம் கொடுத்த அப்துல் மதீன் தமாதா கோவா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி தீவிரவாதிகள் மும்பையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களை நடத்த கர்நாடக மாநிலம் பட்கலைச் சேர்ந்த அப்துல் மதீன் தமாதா(50) என்பவர் துபாயில் இருந்து ஹவாலா மூலம் ரூ.10 லட்சத்தை கன்வர் பத்ரிஜா என்பவருக்கு அனுப்பியுள்ளார். 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் யாசின் பட்கல் டெல்லியில் கன்வர் பத்ரிஜாவை சந்தித்து பணத்தை வாங்கியுள்ளார்.
இந்த தாக்குதலை அடுத்து மதீன் மற்றும் அவரது உறவினர் உபைர், மைத்துனர் முசாபர் கோலா ஆகியோர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக துபாயில் வசித்து வந்த மதீனை மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கோவா விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை மதீனை அவர்கள் கைது செய்தனர்.
உபைர் துபாயில் வசித்து வருகிறார். ஆனால் முசாபர் பட்கலில் உள்ளதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மதீன் போலீசாரிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6வது நபர் மதீன் ஆவார். முன்னதாக நகி அகமது, நதீம் ஷேக், கன்வர் பத்ரிஜா, ஹாரூன் நாயக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். யாசின் பட்கல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
போலீசாரால் தேடப்பட்டு வந்த மேலும் 2 குற்றவாளிகளான தெஹ்சீன் அக்தர், பாகிஸ்தானைச் சேர்ந்த வாகஸ் இப்ராஹிம் சாத் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வெடிகுண்டுகளை வினியோகித்த ரியாஸ் பட்கல் மற்றும் வாசிம் என்ற இப்ராஹிம் மட்டும் தான் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இதற்கிடையே மதீன் அனுப்பிய பணம் தீவிரவாத தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டது அவருக்கு தெரியாது என அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications