பெங்களூர் நகைக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி நகைகள் உருகின
பெங்களூர்: பெங்களூரின் பரபரப்பான எம்.ஜி. ரோட்டிலுள்ள பிரபல நகைக்கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் வாடிக்கையாளர்களும், நகைக்கடை ஊழியர்களும் அலறியடித்து வெளியே ஓடினர். தீயில் நகைககள் உருகி விடாமல் இருப்பதற்காக, பொட்டலம், பொட்டலமாக நகைகள் சாலையில் தூக்கி எறியப்பட்டன.
முதலாவது மாடியில் நகைக்கடை
பெங்களூர் எம்ஜிரோட்டில் உள்ள அடுக்குமாடி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றின், முதலாவது மாடியில், நவரத்னா என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணியளவில் நகைக்கடை திறக்கப்பட்டது. அப்போது திடீரென நகைக்கடையின் ஒரு மூலையில் தீவிபத்து ஏற்பட்டது.
இரண்டாவது மாடிக்கும் மளமள
இந்த தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது. இந்த தீ, நகைக்கடையில் மட்டுமில்லாமல், இரண்டாவது மாடியிலுள்ள 'ஸ்டேட் பேங் ஆப் மைசூர் ' கிளைக்கும் பரவியது. இதையடுத்து நகைக்கடை, வங்கியில் வேலை பார்த்த ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
போக்குவரத்துக்கு தடை
தகவல் அறிந்ததும் 6 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு படை வீரர்கள், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து எம்ஜிரோட்டில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்வோர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நகைக்கடை அதிபர் கவுதம் இதுகுறித்து கூறுகையில், நகைக்கடையின் பின்புறமுள்ள குப்பை சேகரிக்கும் இடத்தில் இருந்து தீவிபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கிறோம் என்றார்.
தங்க மழை
இதனிடையே தீ எரிந்து கொண்டிருக்கும்போதே, நகைக்கடை ஊழியர்கள் சிலர், நகைகளை பொட்டலமாக கட்டி, அதை முதல் மாடியில் இருந்து கீழே வீசினர். போலீசார் சூழ்ந்து நின்று நகைக்கு பாதுகாப்பு கொடுத்தனர். நகைகளை உருகவிடாமல் தடுக்க இவ்வாறு செய்ததாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.
பல மணி நேர போராட்டம்
தீயணைக்கும் பணி பல மணி நேரம் தொடர்ந்து, பிற்பகலில்தான் முடிவுக்கு வந்தது. பிற மாடிகளுக்கும் தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அவை தப்பின. இந்த விபத்தில் பல கோடி மதிப்புள்ள நகைகள் எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. சேத மதிப்பை ஆராய்ந்து வருகிறார்கள்.