மேற்கு வங்க துர்கா பூஜையில் மரபுகளை உடைத்தெறிந்து முதல்முறையாக திருநங்கை சிலைக்குப் பூஜை
கொல்கத்தா: துர்கா பூஜையையொட்டி முன் எப்போதும் இல்லாத வகையில் கொல்கத்தாவில் முதல்முறையாக திருநங்கை கடவுள்களின் சிலை தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தின் 300 வருட கால வரலாற்றில், துர்கா பூஜையின் போது சிவனும், பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை வழிபாட்டிற்காக வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
துர்கா பூஜையின் நிர்வாகக் குழுவினரோடு இனைந்து பிரத்தியாய் ஜென்டர் டிரஸ்ட் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. இதில் பிரத்தியாய் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த திருநங்கைகளும் பங்கேற்கின்றனர்.
India's first Transgender Durga Puja to be held in Kolkata pic.twitter.com/4XXg5BMkyy
— TIMES NOW (@TimesNow) October 16, 2015
பத்து நாட்கள் நடைபெறும் இந்த பூஜையில் ஐந்தாவது நாள் விழாவாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பஞ்சமி சிறப்புப் பூஜைக்காக நிர்வாகக் குழு ரூபாய்.1.5 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து பிரத்தியாய் ஜென்டர் டிரஸ்ட்டின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,' இது சமூகத்தில் விளிம்பு நிலையிலுள்ள திருநங்கைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் ஒரு முயற்சியாகும். நாம் வழி வழியாக பின்பற்றி வரும் சடங்குகளும், சம்பிரதாயங்களும் பெண்களை இழிவு படுத்துபவையாகவும், பெண்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துபவையகவுமே அமைந்துள்ளன.
இன்னும் சில தினங்களில் நடைபெறவிருக்கும் பஞ்சமி சிறப்புப் பூஜை திருநங்கைகளுக்கும், பெண்களுக்கும் சமுதாயத்தில் ஒரு சிறந்த அடையாளத்தை ஏற்படுத்துவதாக அமையும்', என்று கூறப்பட்டுள்ளது.