மதுரை எய்ம்ஸ் மாதிரியே.. ம.பியில் ஒரு "ஆக்சிஜன் ஆலை".. அடிக்கல் நாட்டியதோடு சரி.. கல் மண் மட்டுமே!
போபால்: மத்திய பிரதேசத்திற்கு சொந்தமாக ஆக்ஸிஜன் ஆலை இல்லை. இரண்டாவது கொரோனா அலை தினசரி 13,000 க்கும் மேற்பட்ட கேஸ்களுடன் பாதிக்கப்பட்டு வருகிறது. குஜராத், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மத்திய பிரதேசம் இறக்குமதி செய்கிறது.
கோவிட் நோயாளிகள் மத்திய பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஆலை கூட மத்திய பிரதேசத்தில் இல்லை.
நம்ம மதுரை எய்ம்ஸ் போலத்தான் மத்திய பிரதேசத்தின் ஹோஷங்காபாத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த ஆண்டு அக்டோபரில் அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ரூ .150 கோடி மதிப்பிலான தனியார் ஆக்ஸிஜன் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.ஆறு மாதங்களில் இந்த ஆலை செயல்படும் என்றும், அரசு எந்தவொரு பற்றாக்குறையையும் எதிர்கொள்ளாது என்றும் சிவராஜ் சிங் சவுகான் உறுதியளித்தார்.
'பிளைட்' ஏறுவதற்காக.. துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பயணி.. அதிகாரிகள் அதிர்ச்சி.. பரபரப்பான கோவை!
கட்டிடம் இல்லை
ஆனால் அங்கு கட்டிடம் கூட இன்னமும் கட்டி முடிக்கவில்லை. நம்ம மதுரை எய்ம்ஸ்க்கு எப்படி செங்கற்கள் நாட்டப்பட்டு அப்படியே கிடப்பில் உள்ளதோ அதுபோலவே இந்த ஆலையும் உள்ளது. வேலி அமைக்கப்பட்ட தொழிற்சாலை நிலத்தில் சில உலோக கம்பிகள் வெறும் மணல் மற்றும் கற்களின் குவியலுமே காணப்படுகிறது.
எதுவும் நடக்கவில்லை
அரசு சொன்னப்படி ஆரம்பிக்கப்பட்டிருந்தால், இந்நேரம் ஒரு நாளைக்கு 150 மெட்ரிக் டன் (எம்டி) திரவ ஆக்ஸிஜனும், ஒரு நாளைக்கு 54 மெட்ரிக் திரவ நைட்ரஜனும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அண்டை மாநிலங்களிடம் உதவியை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறது மத்திய பிரதேசம்
ஆக்ஸிஜன் ஆலை இல்லை
மத்திய பிரதேசத்தின் தேசிய சுகாதார மிஷன் கமிஷனர் சவி பரத்வாஜ் தி பிரின்ட் ஊடகத்திடம் கூறுகையில், தினமும் மாநிலத்திற்கு சுமார் 390-400 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது . தினசரி ஆக்ஸிஜனுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்திற்கு சொந்தமாக ஆக்ஜிஜன் ஆலை இல்லை, " என்றார்.
தங்கத்தைவிட மதிப்பு
செவ்வாயன்று, மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் 98 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மத்திய பிரதேசத்தில் ஆக்ஸிஜன் தங்கத்தை விட விலை மதிப்புடையாக பார்க்கப்படுகிறது. இந்தூரில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நுழைவாயிலில் பழைய, பயன்படுத்தப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் ஆக்ஜிஜனை நிரப்ப மக்கள் காத்துகிடக்கிறார்கள்.
சிக்கனம்
இந்த சூழலில் அங்குள்ள சில மருத்துவர்கள் ஆக்ஸிஜனை மிகவும் நியாயமான முறையில் பயன்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர், இந்த முறை மூலம் அவர்கள் அதிக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும் என்கிறார்கள் இந்தூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ மருத்துவமனையின் நுரையீரல் நிபுணர் டாக்டர் ரவி டோசி, உயிரை காக்கும் ஆக்ஸிஜனை பயன்படுத்தும் முறையை விளக்கினார்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை
தேவைப்படும் ஒருவருக்கு ஆக்ஸிஜனை கொடுப்தற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது. 10 லிட்டரில் தொடங்கி ஒவ்வொருவரின் தேவைக்கு தகுந்தாற்போல் , நோயாளிகளுகளுக்கு ஆக்ஸிஜன் தருகிறார்கள். 10 லிட்டர் அதன்பிறகு 5 லிட்டர், பின்னர் 2 லிட்டர் என படிப்படியாக குறைக்கிறார்கள். ஆக்ஸிஜனை தேவையின்றி வீணடிக்கப்படுவதை தடுக்கிறார்கள். இந்த முறையால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையையை மருத்துவர்கள் அங்கு சமாளித்து வருகிறார்கள்.