முதலில் கும்பமேளா,இப்போது புனித யாத்திரை.. நாம் ஒரே பிழையை தான் மீண்டும் செய்கிறோம்..ஐகோர்ட் கருத்து
டேராடூன்: கும்பமேளா மற்றும் சார் தாம் யாத்திரை போன்ற மத நிகழ்வுகளில் கொரோனா நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதாக உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது, இந்தியாவில் 2ஆம் அலை வேகமாக ஏற்படக் கும்பமேளா போன்ற மத நிகழ்வுகளும், அரசியல் பிரசாரங்களுமே காரணம் என்ற பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
குறிப்பாக உத்தரகண்ட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கக் கும்பமேளாவே காரணம் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், இமயமலையில் 4 புனித தலங்களுக்கான சார் தாம் யாத்திரையிலும் உத்தரகண்ட்டில் பக்தர்கள் முறையான கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருப்பது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்ப்ரெட்டரான கும்பமேளா? ஒரே இடத்தில் குவிந்த 70 லட்சம் பக்தர்கள்.. 2600பேருக்கு கொரோனா உறுதி
தொடர் தவறுகள்
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ் சவுகான், அலோக் வர்மா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், "முதலில் கும்பமேளாவில் நாம் தவறு செய்தோம். அடுத்து இப்போது சார் தாம் புனித யாத்திரையிலும் அதே தவறை செய்துள்ளோம். நாம் ஏன் மீண்டும் மீண்டும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்?
நீதிபதிகள் கேள்வி
இதையெல்லாம் யாரவது மேற்பார்வை செய்கிறார்களா? அல்லது அனைத்தையும் பக்தர்களிடமே ஒப்படைத்துவிட்டீர்களா? கொரோனா வைரஸ் பக்தர்கள் மத்தியில் பரவினால் ன்ன ஆகும்? சிறிய கோவிலில் எப்படி ஒரே நேரத்தில் 20 பேரை அனுமதிக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினர். புனித யாத்திரை செல்லும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றி உத்தரகண்ட் அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
யாரும் மதிப்பதில்லை
அப்போது நீதிபதிகள், "உங்கள் உத்தரவை யார் அமல்படுத்துவது? அதைப் பக்தர்கள் யாருமே மதிப்பதில்லை. சமூக வலைத்தளங்களில் நீங்களே பாருங்கள். இதனால் ஏற்படும் கொரோனா பாதிப்பிற்கு உத்தரகண்ட் மக்களுக்கும் மத்திய அரசுக்கும், மாநில அரசுதான் பதில் கூற வேண்டும். உத்தரகண்ட் தான் ஒரு முறை செய்த பிழையில் இருந்து பாடத்தை கற்காதா என்று நாட்டின் மற்ற மாநிலங்கள் நம்மை நோக்கி கேள்வி எழுப்புகின்றன.
மக்கள் உயிருடன் விளையாடுகிறீர்கள்
நீங்கள் நீதிமன்றத்தை முட்டாளாக்கலாம், ஆனால் மக்களை நீங்கள் முட்டாளாக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் யதார்த்தத்தை நேரடியாக பார்க்கின்றனர். நீங்கள் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறீர்கள்" என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.