ஸ்பைடர் மேன், பேட்மேன் ஆபத்துக்கு வரவில்லை.. உதவுவது பிஷர்மேன்.. தமிழக மீனவர்களுக்கு சபாஷ்!
திருவனந்தபுரம்: கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம் மக்களை வாட்டி எடுத்து வருகிறது.
இருப்பிடங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், தங்களை மீட்க தேவ தூதர்கள் போல் யாராவது வருவார்களா என்று ஹெலிகாப்டரை எதிர்பார்த்து வானம் பார்த்து ஏங்கி, நின்ற மக்களுக்கு, வானுக்கு பதிலாக, படகில் வந்தனர் தேவதூதர்கள். அவர்கள் பெயர்தான் மீனவர்கள்.
கடும் புயலிலும், மழையிலும் மிகப்பெரிய சமுத்திரத்திலே படகுகளை ஓட்டிச்சென்ற அனுபவம் கொண்ட அவர்கள் தான் இன்று கேரளாவில் மீட்பர்கள்.
உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் பயிற்சியின்மையால் பலராலும் அதை செய்ய முடியாது. ஆனால் பயிற்சியும் உதவ வேண்டும் என்ற எண்ணமும் ஒருசேர கொண்ட மீனவர்கள் அதை சாதித்து காட்டி வருகிறார்கள்.
மீனவர் ஒருவர் குனிந்து நின்றபடி தனது முதுகின் மேல் பெண்கள் கால் வைத்து படகில் ஏற அனுமதித்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி எல்லாம் நெகிழச்செய்யும் மீட்பு நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபடுவதை பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன், மீனவர்கள், கேரளாவின், ராணுவ வீரர்கள் என்று புகழ்ந்தார்.
மீனவர்களுக்கு நாளொன்றுக்கு 3000 ரூபாய் ஊதியம் தரப்படும், படகுகள் பழுதுபார்த்தால் இலவசமாக பழுது பார்த்து, தரப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதையும் நிராகரித்துவிட்டனர் மீனவர்கள். எங்களுக்கு பணத்தை கொடுத்து வேதனைப்படுத்த, வேண்டாம். என்னுடைய சகோதர சகோதரிகளை காப்பாற்றுவது எங்கள் கடமையாகும் என்று கூறியுள்ளனர் மீனவர்கள்.
கேரளாவில் ஒரு காலகட்டத்தில், ஈழவர் சமுதாய மக்கள் சாதிய ஏற்றத்தாழ்வின், தீண்டாமையால் பாதிக்கப்பட்டனர். பொது இடங்களில் கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இன்று அந்த சமுதாய மக்கள் தான் அந்த கேரளாவையே மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
— Nixen (@NixenUK) August 20, 2018
ஸ்பைடர் மேன், பேட்மேன், அயன் மேன் ஹாலிவுட்டில் இருக்கலாம், ஆனால் கேரளாவில் எங்களது மீட்பராக இருப்பது பிஷர் மேன் என்றும் மீம்கள் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகின்றன.
கேரள மீனவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை தமிழக மீனவர்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தங்கள் படகுகளை எடுத்துக்கொண்டு ஆலப்புழா, செங்கனூர் போன்ற பகுதிகளுக்கு சென்று முகாமிட்டு உள்ளனர். அது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் சுற்றி வருகிறது.
Hats off to our fishermen from Kanniyakumari, Tamil Nadu who are in the forefront of Rescue operations in Aleppey and Chenganur.#anbudantamizhagam#keralafloods pic.twitter.com/tiqTJvkOs7
— Sameeran (@sameerangs) August 20, 2018
கேரளாவுக்கும், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு மிகவும் நெருங்கிய, தொடர்பு உண்டு. குமரி மாவட்டம் கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்தது. 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தான் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இதற்காக மார்ஷல் நேசமணி உள்ளிட்ட பலரும் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கேரள கடல் எல்லையில் மீன் பிடிப்பது தான் அதிகம். வங்கக்கடல் பகுதியில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்கும் நிலையில், குமரி மாவட்ட மீனவர்கள், அரபிக்கடல் பகுதியில் கேரள மாநில மீனவர்களுடன் இணைந்து மீன்பிடித் தொழில் நடத்துவது வழக்கம்.
— G.V.Prakash Kumar (@gvprakash) August 21, 2018
இதுபோன்ற காரணங்களால் இரு மாநில மீனவர்களுக்கும் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இயற்கைச் சீற்றங்கள் கூட குமரி மாவட்டத்தை கேரளாவுடன் நெருக்கி வைக்கிறது. ஓகி புயல் வீசிய சமயத்தில் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் கேரளாவில் தான் பாதுகாப்புக்கு தஞ்சமடைந்தனர். இப்போது தமிழக மீனவர்களின் பிரதி உதவியை மீட்புப் பணிகள் வழியாக வெளிக்காட்டி வருகிறார்கள்.