சொத்துக் குவிப்பு வழக்கு: மீடியாக்களின் 'லைம் லைட்டில்' கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி
பெங்களூரு: ஜெ.யலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்ட மைக்கேல் டி குன்ஹாவை சுற்றி வந்த மீடியாக்களின் கவனம், தற்போது ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி மீது திரும்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலிலதாவுக்கு 4 ஆண்டு சிறை, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தார் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.
இதனால் நாடு முழுவதிலுமுள்ள மீடியாக்கள் கவனம் மைக்கே டி. குன்ஹா மீது திரும்பியது. அவர் யார், எப்படியெல்லாம் வழக்கை விசாரித்தார் என்பதை அலசி ஆய்வு செய்து செய்தி வெளியிட்டன மீடியாக்கள்.
இந்நிலையில், ஹைகோர்ட்டில் ஜெயலலிதா வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க குமாரசாமி என்ற நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா நியமித்துள்ளார். எனவே, குமாரசாமியின் மீது மீடியாக்கள் கவனம் திரும்பியுள்ளது.
குமாரசாமியின் முழுப்பெயர், சிக்க ராசப்ப குமாரசாமி. 1953-ம் ஆண்டு பெல்லாரியில் பிறந்த குமாரசாமி, 1983-ம் ஆண்டு பார் கவுன்சிலில் உறுப்பினரானார். பெல்லாரி அமர்வு நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர், உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதியாக பதவிஉயர்வு பெற்றார். கடந்த 7 ஆண்டுகளாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் குமாரசாமிதான், இனிமேல் ஜெயலலிதா மீதான வழக்கின் மையப்புள்ளியாக மாறப்போகிறார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து உத்தரவிட்டுள்ளதால், ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமியின் பணிப்பளு அதிகரித்துள்ளது. மற்றொரு மைக்கேல் டி.குன்ஹாவாக மாறி புரட்சிகர உத்தரவுகளை குமாரசாமி பிறப்பிப்பாரா என்பைத பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.