என்.எஸ்.ஜி விவகாரம்.... சீனாவுக்கு வெளியுறவுத் துறை செயலர் திடீர் பயணம்
டெல்லி: அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி) உறுப்பினராவதற்கான ஆதரவை கோரி மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் திடீரென சீனாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியுள்ளார்.
48 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட என்.எஸ்.ஜியில் இந்தியா உறுப்பினராவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா பயணம் மேற்கொண்ட போது இதற்கான லாபி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவும் என்.எஸ்.ஜி.யில் இந்தியாவை உறுப்பினராக்குவதற்கு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
சீனா கடும் எதிர்ப்பு
ஆனால் சீனா, துருக்கி ஆகிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாமல் என்.எஸ்.ஜியில் உறுப்பினராக முடியாது என்கிறது சீனா. மேலும் சீனா அரசு ஊடகங்களோ இது பாகிஸ்தானை சீண்டும் செயல்; தெற்காசியாவின்சமநிலை பாதிக்கப்படும் என்றெல்லாம் எழுதி வருகின்றன.
சியோல் மாநாடு
இதனிடையே என்.எஸ்.ஜி. அமைப்பின் கூட்டம் வரும் 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
சீனா பயணம்
இதனிடையே கடந்த 16,17 தேதிகளில் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் திடீரென சீனாவுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
உறுதி செய்த விகாஸ்
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காகவே வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் சீனா பயணம் மேற்கொண்டிருந்தார் என உறுதி செய்தார். ஜெய்சங்கரின் சீனா பயணம் கை கொடுக்குமா? என்பது 24-ந் தேதி தெரிந்துவிடும்.