தீவிரவாத எதிர்ப்பு படை முன்னாள் தலைவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மும்பையில் அதிர்ச்சி
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் ஹிமான்சு ராய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில், தனது வீட்டில் இருந்தபோது ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பல்வேறு குற்றவழக்குகளை திறம்பட கண்டறிந்ததற்காக புகழப்பட்டவர் ஹிமான்சு ராய். மும்பை நகரின் இணை போலீஸ் கமிஷனராகவும் (குற்றப்பிரிவு) பணியாற்றியவர் ஹிமான்சு ராய்.
1988ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான ராய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு எடுத்துக்கொண்ட மருந்துகள் மற்றும் மன உளைச்சல் போன்றவற்றால் ஏற்பட்ட விளைவுகளால் அவர் விரக்தியில் இருந்ததாகவும், கூறப்படுகிறது.
இதுகுறித்து மும்பை காவல்துறையின் செய்தி தொடர்பாளர், தீபக் தியோராஜ் கூறுகையில், சர்வீஸ் ரிவால்வரை வைத்து சுட்டுக் கொண்டு, ஹிமான்சு ராய் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொத்த காவல்துறையுமே இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.