5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து 6 பேர் பலி
பெங்களூரு: மேல் நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழுந்ததில், தொட்டியின் கீழே குளித்துக் கொண்டிருந்த ஆறுபேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
ராய்ச்சூர் மாவட்டம், யாபலதின்னி என்ற கிராமத்தில் சமீபத்தில் மேல் நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இது ஐயாயிரம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்ட தொட்டியாகும்.
இந்நிலையில் அந்த ஊரில் பிரபலமான உருஸ் என்ற இஸ்லாமிய திருவிழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அக்கிராமத்திற்கு வந்தனர்.
அதில் ஒரு பக்தர் கோஷ்டி, மேல் நிலை நீர்த் தேக்க தொட்டியில் இருந்து கீழே வழிந்து கொண்டிருந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது. இதனால் கீழே, குளித்துக் கொண்டிருந்த பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆறுபேர் பலியானார்கள். தண்ணீர் தொட்டி அருகே நின்ற மேலும் சிலரும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
இறந்தவர்களில், ஆந்திராவை சேர்ந்த சகஜன் (30), ஈரேஷ் (29), உத்தேனப்பா, ராய்ச்சூரை சேர்ந்த ஜோகி மர்கப்பா (55), ஒரிசாவை சேர்ந்த ஜுமைல் (45), ஆகியோர் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.