பிரதமருடன் 'சீமாந்திரா' மத்திய அமைச்சர்கள் சந்திப்பு- ராஜினாமாவை ஏற்க வலியுறுத்தல்!
டெல்லி: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீமாந்திரா மத்திய அமைச்சர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று சந்தித்து பேசினர். அப்போது தங்களது ராஜினாமாவை ஏற்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடந்த 3-ந்தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளை உள்ளடக்கிய சீமாந்திரா பகுதியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு, சுற்றுலா அமைச்சர் சிரஞ்சீவி, வர்த்தகத்துறை இணை அமைச்சர் புரந்தரேஸ்வரி, சாம்பசிவ ராவ், கில்லி கிருபராணி ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றின் மீது பிரதமர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதனிடையே தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ராஜினாமா செய்துள்ள மத்திய அமைச்சர்கள் அனைவரும் கட்சியில் இருந்தும் விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பதவியை ராஜினாமா செய்த மத்திய அமைச்சர்கள் நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர்.
அப்போது, தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் போராட்டம் நடத்தி வரும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமரை அவர்கள் வலியுறுத்தினர். மேலும் தங்களது ராஜினாமாவை ஏற்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.