கர்நாடகாவில் உச்சகட்ட பரபரப்பு.. இந்த நான்கில் ஒன்று நடக்கலாம்!
Recommended Video
பெங்களூரு : கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த மேஜிக் நம்பரை எந்த கட்சியும் எட்டாத நிலையில், மதசார்பற்ற ஜனதாதளமே முதல்வரை முடிவு செய்யும் அல்லது முதல்வர் நாற்காலியில் அமரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆட்சி அமைப்பதில் குமாரசாமியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன. தற்போதைய நிலவரப்படி பாஜக 105 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 38 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரசும், காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்து விடக்கூடாது என்பதில் பா.ஜ.க.வும் மும்முரம் காட்டுகின்றன. இதன் பயனை மதச்சார்பற்ற ஜனதா தளம் சுலபமாக அறுவடை செய்ய தயாராகிவருகிறது.
முதல்வர் நாற்காலியை எடுத்துக்கோங்க...
தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்ட காங்கிரஸ், பா.ஜ.க.வை ஆட்சியில் அமர விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆதரிக்க காங்கிரஸ் தயாராகிவிட்டது. இதை தேவெ கவுடா ஏற்றால், குமாரசாமி முதல்வராக பதவியேற்பார். இதன் மூலம் தான் கிங் மேக்கர் அல்ல, கிங்தான் என அவர் சொன்னது உண்மையாகும்.
மத்திய அமைச்சரவையில் கவுடா கட்சிக்கு இடம்!
தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. உருவெடுத்துள்ள நிலையில், பா.ஜ.க. ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு தரலாம். அதற்கு பிரதிபலனாக, துணை முதல்வர் பொறுப்புடன், மாநிலத்திலும், மத்தியிலும் முக்கிய இலாகாக்களை தருமாறு பா.ஜ.க.வை தேவெ கவுடா நிர்பந்திக்கக்கூடும். மதச்சார்பற்ற ஜனதா தளம் கூடுதல் இடங்களை பெற்றால் அதிகாரப் பகிர்வுக்கும் வாய்ப்புள்ளது.
காங். இல்லா இந்தியாதான் முக்கியம்!
2019 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை வெளியிலிருந்து ஆதரிப்பதாக பா.ஜ.க. அறிவிக்கலாம். இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு பா.ஜ.க. அடித்தளமிடும். அதாவது காங்கிரஸ் இல்லாத இந்தியா முழக்கம் வலுப்பெறும், அத்துடன், காங்கிரஸ் ஆட்சியில் அமர்வதை தடுக்க முடியும். பா.ஜ.க. ஆதரித்தாலும் குமாரசாமி நோகாமல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடுவார்.
எடியூரப்பாவை அழைக்க வாய்ப்புண்டு
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், ஆளுநர் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைக்கக்கூடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரசில் சில அதிருப்தியாளர்களை உருவாக்கி அவர்களது ஆதரவை பா.ஜ.க. பெறக்கூடும். அப்படியான சூழலில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்பார்.