ஒடிசாவில் கோர விபத்து ...இரும்பு ஆலையில் விஷவாயு கசிந்து...4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ரூர்கேலா இரும்பு ஆலையில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மயங்கி விழுந்த மேலும் 6 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், என் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன என்று கூறியுள்ளார்.

விஷவாயு கசிவு
ஒடிசா மாநிலத்தில் பொதுத்துறை நிறுவனமான செயில் நிறுவனத்தின் ரூர்கேலா இரும்பு ஆலை (ஆர்எஸ்பி) உள்ளது. இன்று காலை அந்த ஆலையின் நிலக்கரி இரசாயனத் துறையில் மொத்தம் 10 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கார்பன் மோனாக்சைடு வாயு வெளியேற்றப்படுவதில் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த தொழிளார்கள் மயங்கி கீழே சரிந்தனர்.

4 தொழிலார்கள் உயிரிழப்பு
உடனடியாக அவர்கள் இஸ்பாட் பொது மருத்துவமனையின் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு 4 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 4 பேரும் ஒரு தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்கு உத்தரவு
விபத்து நேரிட்ட உடன் அனைத்து அவசர நெறிமுறைகளும் ஆலையில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். தொழிலாளர்கள் இறப்புக்கு ஆர்.எஸ்.பி தலைமை நிர்வாக அதிகாரி தீபக் சத்ராஜ் இரங்கல் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவியும் செய்வோம் என்று கூறிய அவர் விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார்.

நவீன் பட்நாயக் இரங்கல்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர் ''ரூர்கேலா இரும்பு ஆலையில் விஷவாயு கசிந்து 4 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். என் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உள்ளன, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்'' என்று நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications