சட்டசபை தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் அதிகாரிக்கு பாஜக பெண் வேட்பாளர் பளார் பளார்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான 4வது கட்ட தேர்தல் இன்று நடந்தது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 87 தொகுதிகள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 25ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், 2ம் தேதி இரண்டாவது கட்ட வாக்குப்பதிவும், 9ம் தேதி மூன்றாவது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
காஷ்மீரில் மக்கள் குளிரையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மக்களிடையே பெரும் ஆர்வமும் காணப்பட்டது.
ஜார்க்கண்டிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்ததது. ஜம்மு காஷ்மீரில் 16 தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் 15 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடந்தது...
பளார்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியன் தொகுதி பாஜக வேட்பாளர் ஜாவித் அகமது காத்ரி வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒருவரை தாக்கினார். மேலும் சனாபோரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அமிராகதல் தொகுதி பாஜக வேட்பாளர் ஹினா பட் வந்தார். அவருக்கும் தேர்தல் அதிகாரிக்கும் இடையே சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஹினா தேர்தல் அதிகாரியின் கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.