ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் காந்தி -ராஜாஜி பேரன் போட்டி?
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக காந்தி மற்றும் ராஜாஜியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.
ஆனால் அவர்கள் இருவரிடமும் பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை நடத்தி வருவதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதேபோல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் பனாமா ஆவண பட்டியலில் அமிதாப் பெயர் இடம் பெற்றதை அடுத்து அந்த எண்ணமும் கைவிடப்பட்டது.
ரஜினிகாந்த்
இந்நிலையில் எந்த சர்ச்சையிலும் சிக்காத, எதிர்க்கட்சிகளால் ஆதரிக்கக் கூடிய பொது வேட்பாளரை நிறுத்த பாஜக முடிவு செய்தது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டது. எனினும் அரசியலுக்கு வராமல் அவர் ஒதுங்கியே இருப்பதால் அந்த முயற்சியும் கைவிடப்படுவதாக தெரிகிறது.
பழங்குடியின பெண்
தற்போது பாஜக சார்பில் திரௌபதி முர்மு என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது ஆளுநராக இருக்கிறார். இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காந்தி - ராஜாஜி பேரன்
இவர் மகாத்மா காந்தி - மூதறிஞர் ராஜாஜியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஏ.எஸ். படித்து 1968-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு துணை ஜனாதிபதியின் செயலாளராகவும், ஜனாதிபதியின் இணை செயலாளராகவும் பணியாற்றினார்.
மேற்கு வங்க முன்னாள் கவர்னர்
தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நார்வே, ஐஸ்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் கவர்னராக பணிபுரிந்துள்ளார். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி மேற்கு வங்காள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். 2011-ம் ஆண்டு சென்னை கலாசேத்ரா பவுண்டேசன் சேர்மனாக நியமிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு மே மாதம் வரை அந்த பொறுப்பில் இருந்தார்.