இப்படி ஒரு சோதனையா... ராணுவ சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு வந்த ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல்!!
டெல்லி: ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் வழக்கமாக பயன்படுத்தும் பிரத்யேக விமானம் திடீரென பழுதடைந்ததால் ராணுவ சரக்கு விமானம் மூலம் அவர் இந்தியா வந்து சேரநேரிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் இந்தியா வரும்போதெல்லாம் விமானம் ரூபத்தில் அவருக்கு சிக்கல் வருவது வழக்கமாகிவிட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவுக்கு வருகை தந்தார் ஏஞ்செலா மேர்கல்.
அப்போது அவரது விமானம் ஈரான் மீது பறப்பதற்கு அந்நாடு உரிய அனுமதியை வழங்கவில்லை. இதனால் அந்த விமானம் துருக்கி வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தது. பின்னர் ஒருவழியாக ஈரான் அனுமதி கொடுக்க எரிபொருள் தீருவதற்கு முன்னதாக இந்தியா வந்து சேர்ந்தது மேர்கலின் விமானம்.
இதனைத் தொடர்ந்து ஈரான் மீது செமகாட்டத்தைக் காட்டியது ஜெர்மன். அதேபோல்தான் தற்போதை இந்திய பயணத்திலும் அவருக்கு விமானம் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது மோடி பிரதமரான பின்னர் முதலாவது இந்திய பயணத்தை மெர்கல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
இதற்காக ஜெர்மனியின் பெர்லினில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தமக்கு பிரத்யேகமான ஏர்பஸ் 340 ரக விமானத்தில்தான் இந்தியா புறப்படுவதாக இருந்தது. அதில்தான் கான்பரென்ஸ் அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
ஆனால் திடீரென அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வேறுவழியின்றி ராணுவ சரக்கு விமானத்தில் அமர்ந்து இந்தியாவுக்கு வர வேண்டிய நிலை உருவானது. ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் உட்பட அவரது அமைச்சரவை சகாக்கள் சரக்கு விமானத்தின் முன்வரிசையில் அமர்ந்து கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழு பின்வரிசையில் அமர்ந்து கொண்டனர்.
அப்போது செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெர்மன் தொழிலதிபர் ஒருவர், 'நாம் அனைவரும் இப்போது ஒரே கூரையில் அமர்ந்து இருக்கிறோம்' என்று கிண்டலாக கூறியிருக்கிறார்.
எப்பப்பார்த்தாலும் விமானத்திலேயே சோதனையப்பா...