பெங்களூரில் சோகம்: நாளை 10வது பிறந்தநாளை கொண்டாட உள்ள சிறுமிக்கு பஸ் மோதி கால் உடைந்தது!
பெங்களூர்: நாளை 10வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், மாநகராட்சி பஸ் சக்கரம் ஏறி கால் உடைத்து சிறுமி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த 9வயது சிறுமி சுபா ஹரினி. இன்று காலை சுமார் 8 மணியளவில் தனது மூத்த சகோதரியுடன் பள்ளிக்கு புறப்பட்டார். கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே சகோதரிகள் இருவரும் மாநகராட்சி பஸ்சில் ஏற முயன்றனர். ஆனால் பஸ்சின் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் இயக்கிக்கொண்டிருந்தார்.

எப்படியோ கஷ்டப்பட்டு, சுபா ஹரினியின் அக்கா பஸ்சில் ஏறிவிட்டார். ஆனால் சுபா ஹரினி பஸ்சில் ஏற முயன்று தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரங்கள் சிறுமியின் காலில் ஏறி இறங்கின. உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, காலில் பல இடங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சுபா ஹரினி நாளை தனது 10வது பிறந்தநாளை கொண்டாட உள்ளாராம். நடனத்தில் சுபாவுக்கு ஆர்வம் அதிகம் என்றும், பள்ளியில் அவர் ஒரு தடகள வீரர் என்றும் பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். இந்த விபத்துக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரத்தை அளிக்க உள்ளதாக பெங்களூர் மாநகராட்சி போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கொடுமைப்பா சாமி!












Click it and Unblock the Notifications