கல்யாணம் பண்ணி வைங்க.. உங்களுக்கு ஓட்டு போடுறோம்: இது ஹரியானா கூத்து
சண்டிகார்: வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு வரும்போது ரோடு சரியில்லை... தண்ணி வரலை என்று கூறி தகராறு செய்வார்கள்.
ஆனால் ஹரியானா மாநிலத்தில் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் தரகர் வேலை பார்க்கச் சொல்லியுள்ளனர் ஒரு கிராமத்தினர்.
அந்த மாநிலத்தில் பாலின விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் 1,000 ஆண்களுக்கு 879 பெண்கள்தான் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
பெண் கிடைக்கலயே..
ஹரியானாவில் ஆண்கள் பலரும் திருமணத்துக்குப் பெண் கிடைக்காத விரக்தியில் உள்ளனர். அங்கு திருமணமாகாதவர்கள் சேர்ந்து அவிவாஹித் புருஷ் சங்கதன் (விவாகமாகா தவர்கள் சங்கம்) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கல்யாணம் பண்ணிவைங்க
தொகுதிகளில் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம் இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் "எங்களுக்குத் திருமணத் துக்குப் பெண் பார்த்துக் கொடுத்தால், எங்கள் வாக்கு உங்களுக்குத்தான்" எனக் கூறினர்.
பெண் சிசுக்கொலை
பெண் சிசுக்கொலை இங்கு மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. உடனடியாக இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், மிகவிரைவிலேயே மிக மோசமான பின்விளைவைச் சந்திக்க நேரிடும். ‘பெண்பார்த்துக் கொடுங்கள் வாக்களிக்கிறோம்' என்ற கோரிக்கை வாசகம், விழிப்புணர்வுக்காகவே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கொஞ்சம் கவனிங்க
பெண் சிசுக் கொலை பிரச்சினையை அரசியல்வாதிகள் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சொல்லியிருக்கிறோம்" என்று சமூக ஆர்வலர் ஜாக்லான் கூறியுள்ளார்
அட போங்கப்பா
ஆனால், பெண் பார்க்க வேண்டும் என்ற இந்த கோரிக் கையால் எந்தப் பயனுமில்லை. எந்த வேட்பாளரும் பதிலை கூறாமல் ஓடிப் போய்விடுகின்றனராம்.
பாட்டிலுக்கும் பணத்துக்கும் ஓட்டு
பெரும்பாலான வேட்பாளர்கள் பணமும், மதுவும் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குகின்றனர். ஆனால் மதுவுக்கும், பணத்துக்கும் நாங்கள் வாக்குகளை விற்பனை செய்யமாட்டோம் என்று பீகாரில் ஒரு கிராமத்தினர் கவனம் ஈர்த்தனர். அதேபோல கல்யாணம் பண்ணிவைங்க என்ற கோரிக்கை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.