உணவுக் குழாயை மூக்கில் பொருத்தியபடி.. பால வேலைகளைப் பார்வையிட்ட அமைச்சர் பாரிக்கர்
Recommended Video
பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மூக்கில் உணவுக் குழாய் பொருத்திக் கொண்டு சாதாரண நபர் போல் தனது ஆய்வு பணிகளை மேற்கொள்வதை பார்க்கும் போது பணி மீதான அவரது அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது.
முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஆண்டு கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர் அண்மையில் கணைய பாதிப்பால் அவதியுற்றார். இதையடுத்து அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஓய்வு
அவர் கடந்த அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி முதல் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும் அவர் ஓய்வெடுக்காமல் வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை மேற்கொண்டார்.
பாலம் பணிகள்
இந்நிலையில் பாரிக்கர் பொர்வோரின் பகுதியிலிருந்து மெர்சீஸ் என்ற பகுதிக்கு வந்தார். அங்கு நடைபெற்று வரும் ஜூவாரி மற்றும் மாண்டோவி பாலங்கள் கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டார். இந்த பாலங்கள் வடக்கு கோவாவுடன் பனாஜியை இணைக்கும். இந்த பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும்.
மருந்து
இதில் விஷேசம் என்னவென்றால், மனோகர் பாரிக்கர் மூக்கில் உணவுக் குழாய் பொருத்தப்பட்ட நிலையில் ஆய்வு பணிகளை சர்வ சாதாரணமாக மேற்கொண்டுள்ளார். இந்த உணவுக் குழாய் மூலம்தான் அவருக்கு உணவு, மருந்து கொடுக்கப்படுகிறது.
தொழில் பக்தி
உடல்நிலை சரியில்லாவிட்டாலும் மூக்கில் டியூப்புடன் ஆய்வு நடக்கும் பகுதிக்கு பயணம் மேற்கொண்டு அந்த பணிகளை அவர் பார்வையிட்டது அதிகாரிகளை வியக்க வைத்தது. இதன் மூலம் அவரது அர்ப்பணிப்பும், தொழில் பக்தியும் வெளிப்பட்டுள்ளது.