"ஜெயித்த பின் கட்சி மாற மாட்டோம்.." சாமி முன் சத்தியம் வாங்கிய காங்.. கோவாவில் களைகட்டும் அரசியல்
கோவா: கோவா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அங்கு செய்துள்ள செயல் இணையத்தில் டிரெண்டாக தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யூனியன் பிரதேசமான கோவாவில் வரும் பிப்.14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!
இந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் முனைப்பாக உள்ளது. இதனால் 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகளைக் காங்கிரஸ் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கோவா தேர்தல்
குறிப்பாகக் கோவாவில் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தான் எல்லா கட்சிகளுக்கும் முன்பாக கடந்த டிச.16ஆம் தேதியே காங்கிரஸ் கோவாவில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தலில் வென்ற பிறகு கட்சி மாற மாட்டோம் என்று கோயிலில் வைத்து காங்கிரஸ் தனது வேட்பாளர்களிடம் உத்தரவாதத்தை வாங்கியுள்ளது.
என்ன காரணம்
மொத்தம் 40 இடங்களைக் கொண்ட கோவா சட்டசபையில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை. கடந்த 2017இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், அவர்களில் 10க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இருந்து விலகியது. இதனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதைவிடக் குறிப்பாகக் காங்கிரசுக்கு வாக்களிப்பதும் பாஜகவுக்கு வாக்களிப்பதும் ஒன்று தான் எனக் கோவா மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
சத்தியம் வாங்கிய காங்கிரஸ்
இந்நிலையில், கோவா தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் 36 வேட்பாளர்களிடம் இருந்து காங்கிரஸ் உறுதிமொழியைப் பெற்றுள்ளது. அதாவது தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த 5 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் கட்சியில் தான் இருப்போம் என்று அவர்கள் வழிபாட்டுத்தலங்களில் இருந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். "மகாலட்சுமி தேவியின் காலடியில் எங்களுக்குப் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம். வென்ற பிறகு எந்த சூழ்நிலையிலும் கட்சியுடன் இருப்போம் என்று உறுதியளிக்கிறோம்" என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உறுதிமொழி
அனைத்து 36 வேட்பாளர்களும் இந்து கோயில், தேவாலயம், மசூதி என 3 இடங்களிலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இது குறித்து முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் சட்டமன்ற தலைவருமான திகம்பர் காமத் கூறுகையில், "கோவா மக்கள் மத நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்றவர்கள், மகாலட்சுமியின் முன் 5 ஆண்டுகள் ஒன்றாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துள்ளோம். எந்த கட்சியும் எங்கள் எம்எல்ஏக்களை இழுக்க அனுமதிக்க மாட்டோம்.
பாஜக தான் காரணம்
இறைவன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே, இன்று நாங்கள் மாற மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியை விட்டுச் செல்ல நாங்கள் மட்டும் பொறுப்பல்ல. பாஜக அவர்களுக்கு பல்வேறு ஆஃபர்களை வழங்கியது, அதனால் அவர்கள் கட்சி மாறினார்கள். இது மீண்டும் நடக்காது என்று கோவா மக்களுக்கு நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் சந்தேகம்
கோவா மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க விரும்பினாலும் கூட தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்வார்களா என்பதில் கோவா மக்களுக்குச் சந்தேகமாக இருப்பதாகக் காங்கிரஸ் கட்சியின் மைக்கேல் லோபோவும் தெரிவித்துள்ளார். இதனால் தான் இறைவன் முன்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.