கோவா செல்கிறீர்களா? உஷார்.. இதை கவனத்தில் கொள்ளவும்! கோவா சுற்றுலாத்துறை வெளியிட்ட வார்னிங்
கோவாவில் திறந்த வெளியில் மது அருந்துவதற்கும் சில கட்டுப்பாடுகளை சுற்றுலாத்துறை விதித்துள்ளது.
பனாஜி: கோவாவில் வெளிநாட்டு/வெளிமாநில சுற்றுலாப்பயணிகளுடன் செல்ஃபி எடுப்பதற்கும், அவர்களை புகைப்படம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகளை சுற்றுலாத்துறை விதித்திருக்கிறது. இந்த கட்டுப்பாடுகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும் கோவாவுக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் இங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகளால் அடிக்கடி தொந்தரவு ஏற்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க சுற்றுலாத்துறை அடிக்கடி புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
கோவா சுற்றுலாத்துறையால் தற்போது வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, "வெளிநாடுகளிலிருந்து கோவாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் உள்நாட்டு பயணிகளால் கடுமையான சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் நம்முடைய மாண்பு குறைகிறது. எனவே இனி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுடனும் அவர்கள் அனுமதியின்றி செல்ஃபி எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
செல்ஃபி
செல்ஃபி மட்டுமல்லாது அவர்கள் அனுமதியின்றி அவர்களை புகைப்படமும் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக நீச்சல் உடையில் இருப்பவர்களையும், குளிப்பவர்களையும் எக்காரணத்தைக்கொண்டும் அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கக்கூடாது. செங்குத்தான பாறைகளில் நின்று செல்ஃபி எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமான தனியார் டாக்சிகளை வாடகைகக்கு எடுக்காதீர்கள். டாக்சியில் பயணிக்க தொடங்கும்போதே மீட்டர் பயன்பாட்டை உறுதி செய்யுங்கள். அதேபோல தங்குமிடத்தையும் கவனமாக தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஓட்டல்கள்
அதாவது சுற்றுலாத்துறையில் பதிவுசெய்யப்பட்ட சட்டப்பூர்வமான ஓட்டல்கள்/வில்லாக்களில் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல மிக முக்கியமாக கடற்கரை போன்ற திறந்தவெளியி பகுதியில் மது அருந்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திறந்த வெளியில் மது அருந்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். திறந்தவெளியை தவிர குடிசைகள்/உணவகங்கள் ஆகியவற்றில் மது அருந்த அனுமதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுலாப்பயணிகள் தாங்கள் புக் செய்யும் வாகனங்கள் அரசு அனுமதியுடன் இயங்குகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாகனங்கள்
படகுகளுக்கும் இதே விதிகள்தான் பொருந்தும். மேலும் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள கோயில், வரலாற்று சிறப்பு வாய்ந்த சிற்பங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தும் நோக்கில் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. அதேபோல திறந்தவெளியில் உணவு சமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதனையும் மீறி திறந்தவெளியில் உணவு சமைத்தால் சமையல் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பாக வாய்மொழி உத்தரவுகள் பின்பற்றப்பட்டுவந்த நிலையில் தற்போது இது அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டம்
கோவா என்பது முழுக்க முழுக்க சுற்றுலா மாநிலமாகும். இதன் வருவாயில் பெரும்பங்கு சுற்றுலாத்துறையிலிருந்துதான் கிடைக்கிறது. எனவே இதனை பலப்படுத்த வேண்டும் என்று புதிய திட்டமிடலை கோவா மாநில அரசு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாவே இந்த புதிய உத்தரவுகள் வெளியாகியுள்ளன. இந்த உத்தரவு வழங்கப்படுவதற்கு முன்னதாக கோவா முழுவதும் உள்ள கடைகள், டாக்ஸி வாகனங்கள், உணவகங்கள், தங்குமிடங்கள், ரெசார்ட்டுகள் ஆகியவற்றிக்கு கோவா சுற்றுலாத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சட்டப்பூர்வ உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழ்களையும் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.