"காப்" பஞ்சாயத்துக்களின் அட்டகாசத்துக்கு "ஆப்பு" வைத்த சுப்ரீம் கோர்ட்
கணவன்-மனைவி உறவில் 3-வது நபர் பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Recommended Video

டெல்லி: நம்ம ஊர் ஆலமரத்தடியில் ஜமுக்காளம் விரித்து, சொம்பு வைத்துக் கொண்டு, கோயில் உண்டியலில் அபராதம் செலுத்தும் பஞ்சாயத்து அல்ல இது...
வட இந்தியாவின் குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் பல்வேறு கிராமங்களில் செயல்படும் ஊர் பஞ்சாயத்து... இன்னும் எளிமையாக சொல்லப்போனால் சாதீய கட்டப் பஞ்சாயத்து... இந்த பஞ்சாயத்துக்களின் அடிப்படை வேலையே சாதாரண அடிதடி பிரச்சனையில் தொடங்கி குடும்ப பிரச்சினை வரை விசாரித்து மக்கள் முன்னிலையில் உடனடி தீர்ப்பு வழங்குதுதான்.
பெண்கள் செல்போன் வைத்திருக்கக் கூடாது, ஜீன்ஸ் அணியக் கூடாது போன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதெல்லாம் இத்தகைய பஞ்சாயத்துக்களே.. இந்த பஞ்சாயத்துக்களின் கொள்கை நெறி என்ன தெரியுமா? இரு வேறு சாதிகளைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டால் தீர்ப்பு என்ற பெயரில் கடுமையான தண்டனை வழங்குவதுதான்.
அதாவது பெற்றோரின் சம்மதம் இல்லாமல் வேறு ஜாதி அல்லது மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் கொலை செய்யப்படுவது, ஊரைவிட்டு அடித்து விரட்டப்படுவது, ஒதுக்கி வைக்கப்படுவது போன்ற அராஜகங்கள்தான் பெரும்பாலும் தீர்ப்புகளாக வழங்கப்படும். சில இடங்களில் பெற்றோரே தங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யும் சமூக விரோதங்களும் தீர்ப்பின்பேரில் நிகழும்.

சத்தி வாஹினி
வட இந்தியாவில் இருக்கும் சாதிப் பஞ்சாயத்துகள், சாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணங்களை மட்டுமல்ல, தங்களுடைய சமூகத்துக்குள்ளேயே ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதையும் அனுமதிப்பதில்லை. இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கெல்லாம் 2010-ல் சாவுமணி அடித்தது மத்திய அரசோ, வட மாநில அரசுகளோ அல்ல... சக்தி வாஹினி என்ற சமூகநல அமைப்புதான்...

கட்டைப் பஞ்சாயத்துகள்
சாதியை கட்டி காப்பாற்றுவதுடன், அதை மேலும் வலுவாக்கும் காப் பஞ்சாயத்துக்களை, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசுகள் தடை செய்யவுமில்லை, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் இல்லை... பக்குவப்பட்ட ஜனநாயகம், ஒளிரும் இந்தியா, தழைத்தோங்கும் நாடு என்று பீற்றிக் கொள்ளும் மத்திய அரசால் ஒரு கட்டைப் பஞ்சாயத்தைக் கூட கட்டுப்படுத்த
முடியவில்லை... இத்தகைய பிற்போக்கான செயல்களை தடுத்த நிறுத்த சட்டம் இயற்றாத நிலையிலேயே அல்லது சட்டங்களை இயற்ற வேண்டிய நிலையிலேயே நம் நாடு இன்னமும் இருப்பது அவமானத்தின் உச்சக்கட்டமே. ஆனால் சக்தி வாஹினி அமைப்போ, காப் பஞ்சாயத்துக்களுக்கு முடிவு கட்ட உச்சநீதிமன்றம் கதவை மிக தீவிரமாக தட்டியதற்கு ஒரு பின்னணி சம்பவம் உண்டு...

அங்கித் படுகொலை
டெல்லியைச் சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் அங்கித் சக்சேனா. 23 வயதான இவரும் அதே பகுதியில் உள்ள மாற்றுச் சமூகத்தை சேர்ந்த பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பியுள்ளனர். இவர்களது காதலுக்குப் பெண் வீட்டார் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி காதலியை சந்திப்பதற்காக சக்சேனா சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அப்பெண்ணின் தந்தை, தாய், தம்பி மற்றும் அவரது உறவினர் ஆகியோர் சக்சனாவை வழிமறித்து திடீரென சரமாரியாக தாக்கத் தொடங்கினர். அதிலும் பெண்ணின் தந்தையோ.... காட்டுமிராண்டித்தனமாக தொடர்ந்து அங்கித் சக்சேனாவின் தொண்டை மற்றும் இடுப்புப் பகுதியில் கத்தியால் குத்தி கிழிக்க.... அங்கித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். இந்தியாவையே உலுக்கி போட்ட இந்த சம்பவத்தை முன்னெடுத்துதான், சக்தி வாஹினி அமைப்பு, உச்சநீதிமன்றம் சென்றது.

சிறப்பான தீர்ப்பு
ஜாதி, மத ஆணவ கொலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும், காப்பு பஞ்சாயத்துகளுக்குத் தடை விதிக்க வேண்டியும் முறையிட்டது. பல்வேறு கட்ட வாதங்கள், எதிர்வாதங்கள், ஒத்திவைப்புகள், கால அவகாசங்கள்.... போன்ற நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு நேற்று ஒரு வரலாற்று தீர்ப்பினை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். மனம் ஒத்த இருவர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ்க்கை நடத்துவது என்பது அடிப்படை உரிமை என்றும், கணவன் - மனைவி இடையே 3-வது நபர் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்ட விரோதம் என்றும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு சட்டவிதிகளை உருவாக்கும் வரை இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர். வடமாநிலங்களில் சாதி ஆணவக் கொலைக்கு சாவு மணி அடிக்கும் பயணத்தில் ஒரு மைல்கல்லாக, இந்த தீர்ப்பு அமைந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.

மரண அடி
இந்த தீர்ப்பின் மூலம், இனி நமது நாட்டில் சாதி மாறி திருமணம் செய்வோரின் எண்ணிக்கை கூடும்... ஒடுக்கப்பட்ட சாதியினரை அடித்து அவமானப்படுத்துபவது குறையும்,,, ஆணவக்காலை செய்வது போன்ற சம்பவங்கள் காணாமல் போகும் என எதிர்பார்க்கலாம்,. வறட்டு கவுரவத்தால் பிள்ளைகளின் உணர்வுகளை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி அவர்களை வாழ கட்டாயப்படுத்தும் பெற்றோருக்கு இது ஒரு மரண அடி... சமுதாயத்தின் மனசாட்சி நாங்கள் என்று கூறிக்கொண்டு சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் கட்டப்பஞ்சாயத்துக்களுக்கு இந்த தீர்ப்பு செருப்படி.....

சாதிய காட்டுமிராண்டிகளுக்கு சவுக்கடி
தாங்கள் மட்டும் ஒழுக்கத்தின் அடிப்படையில் வாழ்பவர்கள் என்றும், மற்றவர்களெல்லாம் அப்படி எதுவும் இல்லை என்றும் நினைத்துக் கொண்டு வெற்றுக் கூச்சலிட்டவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு நெத்தியடி.... தார்மிக விழுமியங்கள், சமூக ஒழுக்கம் என்று சில நெறிகளை தங்களுக்கு தாங்களே வகுத்துக் கொண்டு, சாதிய அடிப்படையில் தண்டனைகள் வழங்கிய காட்டுமிராண்டிகளுக்கெல்லாம் இந்த தீர்ப்பு ஒரு சவுக்கடி.... சாதி அடிப்படையில் கொலை வரை செல்பவர்களுக்கும் சாதிதான் எல்லாம் என்று கருதும் அனைவருக்கும் இந்த தீர்ப்பு ஒரு சம்மட்டியடி... எனினும்... தம்பதிகளின் வாழ்வில், சாதி வெறியர்களின் குறுக்கீட்டையும், சுயமாக தண்டனை வழங்கும் போக்கையும் உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டு தடுத்திருந்தாலும், சாதீயம் குறித்தான சமூகக் கண்ணோட்டங்கள் முழுமையாக தகர்த்தெறியப்பட்டால்தான் மனிதம் தழைக்கும்... மாண்பும் சிறக்கும்..

இது "கெட்ட" பஞ்சாயத்து
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவினால் இனி நம்மூர் டிவி ஷோக்களில் ரியாலிட்டி எனப்படும் பஞ்சாயத்துக்கள் தலைதூக்காது என நம்பலாம். இதுநாள் வரை இத்தகைய ஷோக்கள், ஏழைகளின் கண்ணீரை தன் முதலீடாக்கி வந்துள்ளது. தமிழக மக்களின் உணர்வுகள் மலிவாக்கப்பட்டு வியாபாரமாக்கப்பட்டு வந்துள்ளது... குடும்பத்தில் பேசி முடிக்க முடியாத பிரச்சனையையா மீடியா தீர்த்துவிட போகிறது? என்பதையும், அடிதடியை அனைவர் பார்க்கும் நிகழ்ச்சியில் காட்டுவதால் பிரச்சனை பெரிதாகுமே தவிர தீர்வு நோக்கி போய்விடுமா? என்பதையும் சாமான்ய மக்களும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் இனியாவது உணர வேண்டும். அதேபோல, கணவனின் குறைகளை இத்தகைய "கெட்ட" பஞ்சாயத்துக்களில் சொல்லி, அவனை அவமானப்படுத்திய பின்னர், அனைத்தையும் மறந்து புகாரளித்த பெண்ணுடன் அவன் இணைந்து சுமூகமாக வாழ்வானா என்பதை சராசரி பெண்கள் இனியாவது உணர வேண்டும்.

ஆப்பு வைத்த தீர்ப்பு
கணவன்-மனைவி உறவில் இனியும் தலையிடக்கூடாது என்பதையும், அந்த பணிகளை செய்ய தொண்டு அமைப்புகளும், நீதிமன்றங்களும் இருக்கின்றன என்பதையும் டிவி பஞ்சாயத்துக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். எது எப்படியோ, உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகாவது காப்புகளுக்கு காவல்துறை ஆப்பு வைக்கும் என்று நம்புவோம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications