எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தி
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி அறிவிக்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தல் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டில் முடிவடைய உள்ளது.
இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அன்று மாலையே தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 18 எதிர்க்கட்சிகள் இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தின. அதில் காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
மேலும் அவரது பெயர் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பட்டியலில் பரிந்துரை செய்யப்பட்டது. எனினும் ஆளும் கட்சி தலித் வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை நிறுத்தியதால் அவருக்கு ஈடுகொடுக்க அதே பிரிவைச் சேர்ந்த மீராகுமாரை எதிர்க்கட்சிகள் நிறுத்தின.
இதனால் துணை ஜனாதிபதி தேர்தலில் கோபால கிருஷ்ண காந்தி வேட்பாளராக நிறுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.