தமிழக நீதிபதி பதவி நீட்டிப்பு சர்ச்சை... மன்மோகன் சிங்கிடம் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு
டெல்லி: தமிழக நீதிபதியின் பதவி நீட்டிப்பு பிரச்சினை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, தமிழ்நாட்டில் சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றி, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நீதிபதி ஒருவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதில் சுப்ரீம் கோர்ட்டின் காலேஜியத்தில் (நீதிபதிகள் தேர்வுக்குழு) இடம் பெற்றிருந்த முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆர்.சி. லஹோதி, ஒய்.கே.சபர்வால், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் சமரசம் செய்து கொண்டதாக சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தின்போது இது தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். சபை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதற்கு விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பரிசீலனை...
அந்த நீதிபதியின் பதவி நீட்டிப்பு விவகாரத்தில், 2003-ம் ஆண்டு காலேஜியத்துக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. இது தொடர்பாக காலேஜியத்தில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் சில விசாரணைகள் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதில்லை என முடிவு எடுத்தனர். ஆனால் அதன்பின்னர் அந்த நீதிபதியின் பதவி நீட்டிப்புக்கு ஏன் பரிந்துரை செய்யக்கூடாது என பிரதமர் அலுவலகம் கேள்வி எழுப்பியது. அதைத் தொடர்ந்து அவர் பணி நீட்டிப்பு விவகாரம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது'' என தெரிவித்தார்.
விளக்கம் வேண்டும்...
இந்நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
சமரச அரசு...?
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், ‘இதில் ஒட்டு மொத்த விவகாரமும் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவினால் அம்பலத்துக்கு வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எப்படி செயல்பட்டது என்பதை இது காட்டுகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் அந்த அரசு சமரசம் செய்து கொண்டது.
மவுனம்...
இந்த விவகாரத்தில் மன்மோகன் சிங்கின் மவுனம், மறைப்பதற்கு ஏதோ இருக்கிறது என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது. நீதியின் நலனை முன்னிட்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இதில் சரியாக என்ன நடந்தது என்பது குறித்து உறுதியான விளக்கம் அளிக்க வேண்டும். அவர் உண்மையிலேயே நிர்ப்பந்தத்துக்கு ஆளானாரா?
மக்களின் உரிமை...
இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளுகிற உரிமை மக்களுக்கு இருக்கிறது. அது நீதித்துறையின் நிலையை உயர்த்த உதவும். தவறுகள் ஏதாவது இருந்தால் அதையும் நீக்க உதவும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மவுனம் கலைக்க வேண்டும்...
இதற்கிடையே, நேற்று டெல்லி ராஜ்யசபாவில் இந்த விவகாரத்தை அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் எழுப்பினார். அப்போது அவர், ‘‘இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அதனால்தான் இந்தப் பிரச்சினையில் மன்மோகன்சிங் பதில் அளிக்காமல் மவுனமாக உள்ளார். அந்த ஊழல் நீதிபதி பதவியில் தொடர்வதற்கு, அவருக்கு நிர்ப்பந்தம் வந்ததா? தேசம் உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறது. இதில் மன்மோகன்சிங் மவுனம் கலைக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.
கவனத்தில் கொள்கிறோம்...
அதற்கு சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதில் அளிக்கையில், மைத்ரேயனின் கருத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக கூறினார்.