முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்ததற்கு ஓய்வூதிய திட்டம் காரணமல்ல: அருண் ஜெட்லி
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், முன்னாள் ராணுவத்தினர் மீது அனுதாபப்படவில்லை என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லி: டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்ததற்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது காரணம் அல்ல என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து உயிரிழந்த ராணுவ வீரரின் சடலத்தை பார்க்கச் சென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர அருண் ஜெட்லி டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 10 ஆண்டு கால ஆட்சியில் முன்னாள் ராணுவத்தினர் மீது காங்கிரஸ் அனுதாபப்படவில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சியின் போது ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கியதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், ராம் கிஷன் தற்கொலைக்கு, ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது காரணம் அல்ல என்றும், வங்கி தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளியால் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.