பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆணையங்களின் தலைவர்களையும் நீக்குகிறது மோடி சர்க்கார்!
டெல்லி: மாநிலங்களின் ஆளுநர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை குழு துணைத் தலைவர்கள் நீக்கத்தைத் தொடர்ந்து பெண்கள் ஆணையம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் நியமனங்களையும் மோடி அரசு நீக்க இருக்கிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு ஏற்றவுடன் மாநில ஆளுநர்கள் பலரையும் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகிறது. சில மாநில ஆளுநர்கள் இதனை ஏற்க மறுத்துவருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் ஜோஷி, சத்தீஸ்கர் மாநிலத்தின் சேகர் தத் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
ஆளுநர்கள் பிடிவாதம்
அதே நேரத்தில் கேரளாவின் ஷீலா தீட்சித், கர்நாடகாவின் பரத்வாஜ், அஸ்ஸாமின் ஜே.பி. பட்நாயக் ஆகியோர் பதவி விலக மறுத்து வருகின்றனர். ஜனாதிபதி கேட்டுக் கொண்டால் பரத்வாஜ், ஜே.பி.பட்நாயக் ராஜினாமா செய்ய வாய்ப்பிருக்கிறது.ஆனால் ஷீலா தீட்சித் பிடிவாதம் காட்டுவார் என்பதால் யூனியன் பிரதேசம் ஒன்றுக்கு அவர் ஆளுநராக மாற்றப்படலாம்.
ரோசையா ராஜினாமா?
தமிழக ஆளுநர் ரோசையா தாமே முன்வந்து ராஜினாமா செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
பேரிடர் குழுவில் அதிரடி
இப்படி ஆளுநர்கள் நீக்கம் என்கிற பரபரப்பு அடங்குவதற்குள் பிரதமர் தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் உட்பட உறுப்பினர்கள் 7 பேரையும் ராஜினாமா செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
ராஜினாமாக்கள்
பிரதமர் தலைமையிலான இந்த தேசிய பேரிடர் குழுவின் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியின் சசிதர் ரெட்டி, உறுப்பினர்களாக கே.எம்.சிங், ஜே.கே.சின்ஹா, சலீம் அலி, கே. குப்தா, பட்டச்சர்ஜி, முசாஃபர் அகமது, ஜே.கே. பன்சால், கே.என். ஸ்ரீவத்சவா ஆகியோர் இருக்கின்றனர். பேரிடக் குழுவின் துணைத் தலைவர் பதவி என்பது இணை அமைச்சருக்கு இணையானது.
இவர்களில் சசிதர் ரெட்டி உட்பட 5 பேர் ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். இதர உறுப்பினர்களும் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்து விடுவர் என்று கூறப்படுகிறது.
ஆணையங்களும் கலைப்பு
இதைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் தேசிய ஆணையம், சிறூபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்கள் ஆணையம் ஆகியவையும் மறுசீரமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவராக மமதா சர்மா, இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் தலைவராக கரன்சிங், தாழ்த்தப்பட்டோர் கமிஷன் தலைவராக புனியா ஆகியோர் இருக்கின்றனர். இவர்கள் மூவருமே காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவர்கள். தற்போது இவர்களையும் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல பல கமிட்டிகளின் தலைவர்களையும் நீக்குவது என்று மோடி அரசு முடிவு செய்துள்ளது.