ஆபரேஷன் அம்மா: இந்து மதத்தை காக்க கொலை செய்தேன்.. கவுரி லங்கேஷ் கொலையாளி பரபரப்பு
கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளி, எப்படி கொலை நடந்தது, எதற்காக கொலை நடந்தது என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளி, எப்படி கொலை நடந்தது, எதற்காக கொலை நடந்தது என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார்.
கொலையை ஒப்புக்கொண்டார்
ஏற்கனவே கே டி நவீன் குமார் தன்னுடைய கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர் விசாரிக்கப்பட்டார். எப்படி இந்த கொலை சம்பவம் நடந்தது என்று ஒவ்வொரு விவரமாக அவர் தெரிவித்தார்.உண்மை கண்டறியும் சோதனையில் தான் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த கொலையில் இன்னும் சில கூட்டாளிக்கும் தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கைது
இந்த நிலையில் இந்த கொலையில் புதிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பரசுராம் வாக்மோர் என்ற தீவிரவாதியை விஜயபுரா மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பரசுராமிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். ஹிந்து ஜனதாகர்த்தி சமிதி என்ற அமைப்பு சொல்லித்தான் கொலை செய்ததாக கூறியுள்ளான்.
ஆபரேஷன்
பரசுராம் விசாரணையில், எனக்கு யாரை கொலை செய்ய போகிறேன் என்று தெரியாது. அவர் பெயர் கூட எனக்கு தெரியாது. இந்த கொலைக்கு ஆபரேஷன் அம்மா என்று பெயர் வைத்து இருந்தார்கள். அதேபோல், இந்த கொலையை செய்தால் இந்து மதம் நன்றாக இருக்கும் என்றனர். இந்து மதத்தின் நன்மைக்காக கொலையை செய்தேன். ஆனால் அந்த பெண்ணை கொன்று இருக்க கூடாது என்று இப்போது நினைக்கிறேன்.
இயக்கம்
ஹிந்து ஜனதாகர்த்தி சமிதி என்ற அமைப்பு சொல்லித்தான் கொலை செய்தேன். ஆனால் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரும் என்னிடம் பெயர் சொல்லவில்லை. கொலை செய்த பின்பும் கூட யாரும் என்னிடம் பெயர் சொல்லவில்லை. அப்படி பெயர் கேட்பதும், சொல்வதும் இந்து மதத்திற்கு விரோதமானது என்று கூறினார்கள். அதனால், அந்த இயக்கத்தை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை.
பெரிய பயிற்சி
என்னை செப்டம்பர் மாதம் பெங்களூருக்கு அழைத்து வந்தனர். எனக்கு துப்பாக்கி சுட தெரியாது. ஹிந்து ஜனதாகர்த்தி சமிதியை சேர்ந்த நபர் ஒருவர் எனக்கு காட்டுப்பகுதிக்குள் சென்று துப்பாக்கி சுட கற்றுக் கொடுத்தார். சரியாக இரண்டு வாரம் குறி பார்த்து சுட கற்றுக்கொண்டேன்.
வீட்டிற்கு அழைத்து சென்றனர்
அதன்பின் என்னை, அந்த பெண்ணின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அப்போது கூட எனக்கு அவர் பெயர் தெரியாது. ஒரு வாரம் அந்த பெண்ணின் வீட்டை சுற்றி சுற்றி வந்தோம். எப்படி சுடலாம் என்று அவர்களே திட்டத்தை தெரிவித்தார்கள். ஒவ்வொரு முறை என்னை வேறுவேறு நபர் அந்த வீட்டிற்கு கொண்டு சென்றார்கள். நான் மூன்றாவது நாள் கொலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
நடக்கவில்லை
ஆனால் அன்று என்னால் கொலை செய்ய முடியவில்லை. அவர் வேலையை விட்டு வந்த பின் எங்குமே வெளியே செல்லவில்லை. அதனால் அவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவர் வீட்டிற்குள்ளேயே இருந்தார். அதனால் அன்று அவரை கொல்ல முடியவில்லை. அதற்கு மறுநாள் கொலை செய்யும் திட்டத்தை ஒத்திவைத்தோம்.
கொலை நாள்
அதன்பின் சரியாக செப்டம்பர் 5ம் தேதி கொலைக்கு நாள் குறிக்கப்பட்டது. அன்று மாலை நான் துப்பாக்கியுடன் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். என்னுடன் மூன்று பேர் வந்திருந்தனர். அவர்களின் முகத்தை சரியாக பார்க்கவில்லை. அவர்கள் ஹிந்து ஜனதாகர்த்தி சமிதியை சேர்ந்தவர்கள். ஆனால் யார் என்று தெரியவில்லை.
சுட்டேன்
அந்த பெண் வெளியே வரும்வரை காத்திருந்தேன். அந்த பெண் வெளியே வந்ததும் அவரின் அருகே சென்றேன். அப்போது இருமினேன். அவரை என்னை திரும்பி பார்த்தார். அப்போது சரியாக துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு நாங்கள் நான்கு பேரும் தப்பித்தோம். அந்த மூன்று பேர் எங்கே சென்றார்கள் என்று தெரியாது. அவர்களை அதற்குப்பின் பார்க்கவில்லை.
யார் இவர்கள்
விசாரணையின் படி, அந்த மூன்று பேரும் ஹிந்து ஜனதாகர்த்தி சமிதி அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை கைது செய்ய போலீஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது அந்த அமைப்பின் நிர்வாகிகளை விசாரிக்க போலீஸ் முடிவெடுத்துள்ளது.