ஜெ.வுக்கு கர்நாடக ஹைகோர்ட்டில் நாளை ஜாமீன் கிடைக்க வாய்ப்பு- முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நாளை ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, கர்நாடகாவின் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவர் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்ற விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா, அதன் மீதான விசாரணையை வழக்கமான பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
நாளை விசாரணை
தசரா விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் கர்நாடக உயர்நீதிமன்றம் நாளை திறக்கப்படுகிறது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
ஜாமீன் கிடைக்கும்- ஆச்சார்யா
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங்குக்கு முன்பு அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகி வாதாடிய ஆச்சார்யா கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
நெருக்கடி வந்தது
சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் நான் ஆஜராகி வந்தேன். எனக்கு பல்வேறு இடங்களில் இருந்து நெருக்கடி அதிகமாக வந்தது. வேறு வழியில்லாமல் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன்.
உச்சநீதிமன்றம் தலையீடு
தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்ற காரணத்தால் தான் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது. அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரத்தையும் கர்நாடக அரசுக்கு வழங்கியது.
வழக்கு முடிந்து தீர்ப்பு
ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன். சட்டப்படி அது நடைபெற்று முடிந்து உள்ளது.
தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன்
குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால், அந்த தண்டனையை நிறுத்திவைத்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.
ஜெ,வுக்கு ஜாமீன் கிடைக்கலாம்
அதன்படி ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறினார்.