‘தாடி வச்ச மாப்பிள்ளைக்கெல்லாம் பொண்ணு கிடையாது’.. ராஜஸ்தானில் தொடரும் வினோத வழக்கம்!
தாடி வைத்த ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பதில்லை என்ற வினோத பழக்கம் ராஜஸ்தானில் உள்ள குமாவத் சமூகத்தினரிடையே உள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள குமாவத் சமூகத்தினர், தாடி வைத்திருக்கும் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது, சுத்தமாக தாடியை மழித்தவர்களுக்கு மட்டுமே திருமணம் என்ற வினோதமான வழக்கத்தை இன்றளவும் கடைபிடித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலுமே திருமணம் என்பது முக்கியமான நாள். அதனால்தான் சமீபகாலமாக திருமணத்தை பிக் டே என கொண்டாடத் தொடங்கியுள்ளனர். ஒருசிலர் திருமண வரவேற்பின் போது, கோட் சூட் போட்டு, தாடி வைத்து ஒரு லுக்கிலும், திருமண நாளன்று தாடியில்லாமல் வேறொரு லுக்கிலும் என மாப்பிள்ளையை மாத்திட்டாங்களோ என விருந்தினர்களே குழம்பும் அளவிற்கு வித்தியாசம் காட்ட விரும்புகின்றனர்.
அப்போதுதான் திருமண புகைப்படங்கள் நன்றாக இருக்கும் என்பதற்காக ஒரு சிலர் இப்படிப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். ஆனால், ராஜஸ்தானிலோ கிளீன் ஷேவ் எனச் சொல்லப்படும் தாடியில்லாத முகத்தை உடைய ஆண்களுக்கு மட்டுமே திருமணம் செய்ய அனுமதி என்ற வினோத பழக்கம் சில சமூகத்தினரிடையே உள்ளது.

குமாவத் சமூகம்
ராஜஸ்தான் மாநிலத்தில் குமாவத் சமூகத்தில் தான் இத்தகைய சில தீர்மானங்களை பின்பற்றி வருகின்றனர். நாகரீகம் என்ற பெயரில் மணமகன் தாடி வைக்க இந்த சமூகத்தில் அனுமதி இல்லை. திருமணம் என்பது ஒரு சடங்கு, இதில் மணமகனை ராஜாவாகப் பார்க்க வேண்டும் என்பது அவர்களது நம்பிக்கை.

தாடிக்கு நோ
பாலி மாவட்டத்தில் உள்ள 19 கிராமங்களில் இந்த வழக்கம் இப்போதும் நடைமுறையில் உள்ளது. இங்கு தாடி வைத்த மணமகன்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற விதிமுறையை கண்டிப்பாக பின்பற்றி வருகின்றனர். சுத்தமான ஷேவ் செய்து கொண்ட இளைஞர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆடம்பர திருமணங்கள் கிடையாது
மேலும் ஆடம்பர திருமணங்களுக்கும் இங்கு அனுமதியில்லை. திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கான செலவுகளைக் குறைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் திருமண விழாக்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு கறாராக நோ சொல்லி விடுகிறார்கள்.

ஆபரணங்களுக்கும் கட்டுப்பாடு
வட மாநிலங்களில் பிரபலமான ஹல்டி விழாவின் போது மஞ்சளைக்கூட இவர்கள் அனுமதிப்பதில்லையாம். அதேபோல், மணமகள் அணியும் ஆடை, ஆபரணங்களிலும் கட்டுப்பாடுகளை நிர்ணயித்துள்ளனர். உணவு எண்ணிக்கையில் குறிப்பிட்ட எண்ணிக்கையை நிர்ணயித்துள்ளனர்.

அபராதம்
தங்கள் சமூகத்தில் உள்ள நடுத்தர மற்றும் கீழ்-நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளை அவர்கள் வகுத்துள்ளனர். திருமண விழாக்களை சுமையாக கருதாமல், எளிதாக்குவதற்காக இத்தகைய விதிகளை அவர்கள் வகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. விதிகளை கடைபிடிக்காமல், அதை மீறுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications