வாஸ்து சரியில்லை? குஜராத்தில் மீண்டும் விபத்து- வந்தே பாரத் ரயில் மோதியதில் 54 வயது பெண் பரிதாப பலி!
அகமதாபாத்: குஜராத்தில் வந்தே பாரத் ரயில் விபத்துகள் தொடருகின்றன. வந்தே பாரத் ரயில் மோதியதில் 54 வயது பெண் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார்.
குஜராத்தின் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை 7 மணிநேரத்தில் சென்றடையக் கூடிய வகையிலான அதிவேக விரைவு ரயில்தான் வந்தே பாரத். இந்த வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் ரயிலானது, 100 கிலோ மீட்டர் வேகத்தை 52 வினாடிகளில் கடக்கும்; மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அதிநவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது சென்னை- மைசூர் இடையேயும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் வந்தே பாரத் ரயில்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. குறிப்பாக வந்தே பாரத் ரயில்கள் தண்டவாளத்தை கடக்க முயலும் கால்நடைகள் மீது மோதுகின்றன. இதனால் கால்நடைகள் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியாகின்றன. வந்தே பாரத் ரயிலின் முன்பகுதியும் சேதமடைந்து விடுகின்றன. இது பெரும் சர்ச்சையாகவும் தொடருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் ஆனந்த் ரயில் நிலையம் அருகே இன்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 54 வயது பெண் மீது வந்தே பாரத் ரயில் மோதியது. இதில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். காந்திநகரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த போது வந்தே பாரத் ரயில் மோதியதில் அப்பெண் பலியானார்.
முன்னதாக, குஜராத்தில் வந்தே பாரத்தில் மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி பயணம் மேற்கொண்டார். அப்போது ஓவைசியை தாக்குவதாக கருதி வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் வந்தே பாரத் ரயிலின் கண்ணாடிகள் சேதமடைந்தன.
சென்னை-பெங்களூர்-மைசூர்.. வந்தே பாரத் ரயில் கவுண்டவுன் ஸ்டார்ட்.. பயணிகளுக்கு அசத்தல் வசதிகள்!