குஜராத் தேர்தல்:எனக்கு A ஃபார் ஆதிவாசிதான்-பழங்குடி ஓட்டுகளை டார்கெட் செய்து பிரதமர் மோடி பிரசாரம்!
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி உள்ளார். குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் பழங்குடி வாக்காளர்களிடையே இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
182 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஒதுக்கியதோ ரூ.2 கோடி.. செலவோ ரூ.12 லட்சம் தான்.. 135 பேர் பலியான குஜராத் பால விபத்தின் ஷாக் தகவல்
27 ஆண்டுகால பாஜக ஆட்சி
குஜராத் மாநிலத்தில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் பிரதான எதிர்க் கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருக்கிறது. காங்கிரஸ் இடத்தைக் கைப்பற்ற இம்முறை ஆம் ஆத்ம் கட்சி களமிறங்கி இருக்கிறது. இதனால் குஜராத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
7-வது முறையாக சாதிக்குமா?
குஜராத் மாநிலத்தில் 7-வது முறையாக தொடர் வெற்றி பெற்று சரித்திரம் படைக்கும் முனைப்பில் பாஜக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் வரை பிரதமர் மோடி அம்மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியின் பயணத்துக்காகவே குஜராத் தேர்தல் தேதி தாமதமாக அறிவிக்கபட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
பாஜக தலைவர்கள் தீவிரம்
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது மாநிலமான குஜராத்தில் மீண்டும் பாஜகதான் வெல்லும் என்கிறது இதுவரையிலான கருத்து கணிப்புகள். அதுவும் முந்தைய தேர்தல்களை விட இம்முறை அதிக இடங்களில் வென்று பாஜக சாதனை படைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். இருந்தாலும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
பிரதமர் மோடி பிரசாரம்
குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். பழங்குடி வாக்காளர்கள் அதிகம் உள்ள வல்சாத் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: குஜராத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்தி இதுவரையிலான சாதனைகளை முறியடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். இந்த முறை குஜராத்தில் நான் நிகழ்த்திய சாதனையை நானே முறியடிக்கப் போகிறேன். தற்போதைய முதல்வர் பூபேந்திராவின் சாதனை இந்த நரேந்திர மோடியின் சாதனையை மிஞ்சியதாக இருக்கும். அதற்காக நான் பாடுபடுகிறேன்.
A என்பது ஆதிவாசி
நான் டெல்லியில் அமர்ந்திருந்தாலும் இந்த குஜராத் மண்ணில் இருந்துதான் அத்தனையையும் கற்றுக் கொண்டேன். என்னைப் பொறுத்தவரை A என்பது ஆதிவாசிகள்தான். ஆதிவாசி சகோதர, சகோதரிகளிடையே என்னுடைய முதலாவது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.