1+4 பார்முலா.. குஜராத்தில் மாற்றி யோசித்த பாஜக! பலே ஐடியாவால் சாதித்த ‛தாமரை’ ..வெளியான புதுத்தகவல்
காந்திநகர்: பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற நிலையிலும் கூட குஜராத்தில் தொடர்ந்து பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து வருகிறது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7 வது முறையாக வெற்றி பெற்றது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் பாஜகவின் 1+4 பார்மூலா இருப்பது தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மொத்தம் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. முதற்கட்டமாக கடந்த 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக கடந்த 5ம் தேதியும் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக சரித்திர வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைத்தது.

பாஜக சாதனை வெற்றி
மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் பாஜக 156 இடங்களில் வென்றது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் தொடர்ந்து 7 வது முறையாக குஜராத்தில் அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், ஆம்ஆத்மி கட்சி 5 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

எப்படி சாத்தியம்? என ஆச்சரியம்
இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்பட இந்தியாவின் பல மாவட்டங்களில் உள்ள மக்கள் தொடர்ந்து ஒரு கட்சியை ஆட்சியில் வைப்பது இல்லை. இந்த மாநிலங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆட்சி மாற்றம் நிகழ்வது வழக்கமான ஒன்றாகும். சில வேளைகளில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் கட்சியே எதிர்ப்பலைகளையும் மீறி வென்றுள்ளன. நிலைமை இப்படி இருக்க குஜராத்தில் மட்டும் எப்படி பாஜக தொடர்ந்து 7 வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறது, அதுவும் தற்போதைய தேர்தலில் கடந்த முறையை விட அதிக இடங்களில் பாஜக வாகை சூடி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

முதலமைச்சராக நரேந்திர மோடி
இந்நிலையில் தான் குஜராத்தில் பாஜக புதிய பார்முலா ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அதாவது குஜராத் முதல்வராக, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2002 முதல் 2014 வரை செயல்பட்டார். தற்போது வரை குஜராத்தில் அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்த நபர் என்ற பெயர் பிரதமர் நரேந்திர மோடியிடமே உள்ளது. அதன்பிறகு 2014 தேர்தலில் நரேந்திர மோடி பிரதமரான நிலையில் தேசிய அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். அதேநேரத்தில் அவர் குஜராத் மாநிலத்தையும் விட்டுவிடவில்லை. இதற்கு பக்கபலமாக தான் அரசியலில் சாணக்கியர் என அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் இருவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு புதிய திட்டத்தை வகுத்ததாக கூறப்படுகிறது. இந்த திட்டம் குஜராத்தில் பாஜகவுக்கு கைக்கொடுத்து வருவதால் தான் கடந்த 2 தேர்தல்களிலும் தாமரை அங்கு மலர்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

1+4 பார்முலா திட்டம் என்ன?
குஜராத் முதல்வர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்த பிறகு அங்கு 1+4 என்ற பார்முலா பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி 5 ஆண்டு கொண்ட ஆட்சியில் முதல் 4 ஆண்டுகள் ஒருவர் முதல்வராகவும், அடுத்த ஒரு ஆண்டு புதிய நபர் முதல்வராக நியமனம் செய்வது தான். அதிலும் குறிப்பாக பாஜகவின் முதல் 4 ஆண்டு ஆட்சியில் ஏதேனும் குறிப்பிட்ட சமுதாய மக்கள் அதிருப்தியில் இருந்தால் அவர்களை கவரும் வகையில் தான் முதல்வர் நியமனம் செய்யப்படுவார்கள். இல்லாவிட்டால் நியமனம் செய்யப்படும் நபர்கள் அந்த குறிப்பிட்ட சமுதாயத்துக்கு பக்கபலமாக செயல்படுவார்கள்.

துவக்கி வைத்த ஆனந்தி பென் படேல்
அதன்படி குஜராத் முதல்வர் பதவியை நரேந்திர மோடி 2 ஆண்டுகள் வகித்த நிலையில் பிரதமரானதால் ராஜினாமா செய்தார். இதையடுத்து முதல் முறையாக பெண் ஒருவர் முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அதன்படி 2014 மே மாதம் 22ம் தேதி ஆனந்தி பென் படேல் முதல்வரானார். இவர் அந்த 2 ஆண்டு 77 நாட்கள் வரை முதல்வராக இருந்தார். அதன்பிறகு தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே இருந்த நிலையில் ஆனந்தி பென் படேல் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இடஒதுக்கீட்டு விவகாரத்தில் போராட்டம் நடத்திய படிதார் மற்றும் உன்னாவில் 4 பேர் கொலை செய்யப்பட்டதில் தலித் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் தனக்கு 75 வயது நிரம்பியதால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.

விஜய் ரூபானியும் ராஜினாமா
இவரை தொடர்ந்து குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி பொறுப்பேற்றார். இவர் ஓராண்டு காலம் அந்த பதவியில் இருந்தார். 2017ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் விஜய் ரூபானி முதலமைச்சராக 2017 டிசம்பர் மாதம் 22ம் தேதி பதவியேற்றார். 4 ஆண்டுகள் வரை முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு இவர் கடந்த 2021 செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 4 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பூபேந்திர படேலுக்கு பொருந்துமா?
இதையடுத்து புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் நியமனம் செய்யப்பட்டார். இவர் விஜய் ரூபானி விட்டு சென்ற ஆட்சியில் 1 ஆண்டு 90 நாட்கள் முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு தான் தற்போது சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 1 மற்றும் டிசம்பர் 5ம் தேதி என 2 கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பாஜக சாதனை வெற்றி பெற்ற நிலையில் காட்லோடியா தொகுதியில் வெற்றி பெற்ற பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியை விட்டு சென்று 8 ஆண்டுகள் ஆகும் நிலையில் அங்கு 3 பேர் முதல்வராக உள்ளனர். இதில் ஆனந்தி பென் படேல் மற்றும் விஜய் ரூபானி ஆகியோர் 1+4 பார்முலா படி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கடந்த ஓராண்டுகளாக முதல்வராக இருந்த பூபேந்திர படேல் தற்போது மீண்டும் முதல்வராகி உள்ளார். இந்த பார்முலா இவருக்கும் பொருந்தும் பட்சத்தில் இன்னும் 4 ஆண்டுகளில் பூபேந்திர படேல் முதல்வராக இருப்பார். அதன்பிறகு இன்னொருவர் புதிய முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் தற்போது சாதனை வெற்றி பெற்றதால் பூபேந்திர படேல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருக்காது எனவும், அவரது 4 ஆண்டு ஆட்சிகாலம் தான் இதில் இறுதி முடிவு எடுக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications