குஜராத் சட்டசபை தேர்தல்: பட்டேல் சமூகத்தின் இடஒதுக்கீடு கோரிக்கைகளை ஏற்கிறது பாஜக அரசு
சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பட்டேல் சமூகத்தின் இடஒதுக்கீடு கோரிக்கைகளை அம்மாநில பாஜக அரசு ஏற்க முன்வந்துள்ளது.
அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பட்டேல் சமூகத்தின் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க அம்மாநில பாஜக அரசு முன்வந்துள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரசாரம் செய்து வருகிறார்.

பட்டேல் சமூகத்துடன் பேச்சு
இடஒதுக்கீடு கோரி மிகப் பெரும் போராட்டத்தை நடத்திய பட்டேல் சமூகத்தினர் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் தற்போது பட்டேல் சமூக வாக்குகளை குறித்து மாநில ஆளும் பாஜக அரசு காய்களை நகர்த்தி வருகிறது.

ஹர்திக் பட்டேல் குழு
இதன் முதல் கட்டமாக பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேல் உள்ளிட்டோருடன் நேற்று அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. குஜராத் துணை முதல்வர் நிதின் பட்டேல் தலைமையிலான குழுவுடன் ஹர்திக் பட்டேல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஏற்கப்பட்ட 2 கோரிக்கைகள்
இப்பேச்சுவார்த்தையின் முடிவில் இடஒதுக்கீட்டைப் பெறாத சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையம் அமைப்பது; இடஒதுக்கீடு கோரி பட்டேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் உயிரிழந்த 14 குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிப்பது ஆகிய கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது.

போராட்டம் தொடரும்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஹர்திக் பட்டேல், எங்களது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் இடஒதுக்கீட்டைப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என அறிவித்தார்.

பிரச்சனை என்ன?
குஜராத்தில் 25% பட்டேல் சமூகத்தினர் உள்ளனர். முற்படுத்தப்பட்ட சமூகத்தினராகிய பட்டேல்கள் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் அல்லது இடஒதுக்கீடு முறையை ஒழிக்க வேண்டும் என 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தலைமை ஏற்ற ஹர்திக் பட்டேல் மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் 14 இளைஞர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications