தேர்தல் செலவுகளுக்காக 1600 கிமீ கடற்கரையை குஜராத் அரசு விற்றது: காங். குற்றச்சாட்டு
காந்திநகர்: நாடாளுமன்றத் தேர்தல் செலவுகளை சமாளிப்பதற்காக குஜராத் அரசு அம்மாநிலத்தில் உள்ள 1600கிமீ கடற்கரையை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்றதாக காங்கிரஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா கூறுகையில்,
‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்துள்ளது. அப்பணம் மக்களின் பாதுகாப்பை பணயம் வைத்துப் பெறப்பட்டுள்ளது என்பது தான் சோகமான விசயம்.
ஆம், அந்தப் பணம் அதானி மற்றும் சில கார்ப்பரேட் கம்பெனிகள் மூலமாக பாஜகவுக்கு கிடைத்துள்ளது. குஜராத்தில் உள்ள 1600 கிமீ கடற்கரையை ஆளும் அரசு சில கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்றதற்கு மாற்றாக அப்பணம் நிதியாக தரப்பட்டுள்ளது.
இதன மூலம், அந்த குறிப்பிட்ட கடற்கரைப் பகுதிகளில் கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வணிகம் செய்து கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் குஜராத் அரசு அதானியின் முந்திரா துறைமுகத்தின் நலனுக்காக மற்ற துறைமுகங்களின் வளர்ச்சியை முடக்கியது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.