நான் அடிபணிய மாட்டேன்..புஷ்பா ‛டையலாக்’ சொல்லி தெறிக்கவிட்ட ஜிக்னேஷ் மேவானி.. ஜாமீன்
கவுஹாத்தி: பிரமதர் நரேந்திர மோடியை விமர்சித்ததாக கைதாகி ஜாமீனில் வந்த குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி போலீஸ் அதிகாரியை தாக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் ‛புஷ்பா' பட ‛டைலாக்' கூறி ஜிக்னேஷ் மேவானி பாஜகவினரை தெறிக்கவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் வட்கம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ஞ் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் உள்ளார்.
இவர் கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது இவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு பெற்றது.

ஜிக்னேஷ் மேவானி கைது
இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை நள்ளிரவில் குஜராத் மாநிலம் பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் அவரை அசாம் போலீசார் கடந்த வாரம் வியாழக்கிழமை கைது செய்தனர். பிறகு அவர் விமானத்தில் அங்கிருந்து அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடியை கோட்சேவுடன் தொடர்பு படுத்தி டுவிட்டரில் பதிவிட்டது தொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஜாமீனுக்கு பின் மீண்டும் கைது
இந்த வழக்கில் கோக்ரஜார் நீதிமன்றம் நேற்று மாலை ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.ஆனால் இந்த விடுதலை அதிக நேரம் நீடிக்கவில்லை. மாறாக அடுத்த சில மணிநேரங்களில் ஜிக்னேஷ் மேவானியை போலீசார் மீண்டும் கைது செய்தனர். கவுஹாத்தியில் இருந்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தபோது அவர் பெண் போலீஸ் அதிகாரியை திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து இருக்கையில் தள்ளியதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜிக்னேஷ் மேவானி மறுப்பு
இந்த குற்றச்சாட்டுகளை ஜிக்னேஷ் மேவானி முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இந்த செயலை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் செய்துள்ளனர்'' என்றார். இந்நிலையில் 2வது வழக்கிலும் இன்று ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

பிரதமரிடம்
இந்நிலையில் அவர் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛என்னை கைது செய்தது என்பது சிறிய விஷயம் அல்ல. இது பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் கீழ் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். பிரதமர் குறித்து நான் செய்த ட்வீட்டை நினைத்து பெருமைப்படுகிறேன். நாட்டில் நிலவும் வகுப்புவாத பிரச்சனை தொடர்பாக அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். இந்திய குடிமகனாக இதை கேட்க எனக்கு உரிமை உள்ளது. ஒரு மக்கள் பிரதிநிதி என்பதன் மூலம் எனது கடமை என்ன?. அமைதியைப் பேணுமாறு மக்களை வற்புறுத்துவதுதான், அதைத்தான் நான் செய்தேன். இதற்கு கைது செய்துள்ளனர்.

தேர்தலால் குறிவைக்கப்படுகிறேன்
இரண்டாவது வழக்கில் பெண் ஒருவரை பயன்படுத்தி என்னை கைது செய்துள்ளனர். இதற்காக கட்டுக்கதையை உருவாக்கி உள்ளனர். இது பாஜகவின் கோழைத்தனத்தை காட்டுகிறது. குஜராத்தில் விரைவில் தேர்தல் வருகிறது, அதனால் நான் குறிவைக்கப்படுகிறேன். இந்த தந்திரத்தை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

பெரிய சதி
என்னை வெவ்வேறு வழக்குகளில் சிக்கவைக்க பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது எனக்கு தெரியும். குஜராத்தில் உள்ள எம்எல்ஏவை அஸாம் போலீசார் மூலம் கைது செய்ததன் பின்னணி என்பது சதியின் ஒருபகுதியாகும். பாஜகவினர் தங்களை கேள்வி கேட்பவர்கள் மீதும், உண்மைகளை பேசுபவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்கிறார்கள். அசாம் மக்களும் காங்கிரஸ் கட்சியும் என்னை ஆதரித்தது உதவியாக இருந்தது'' என்றார்.

‛புஷ்பா’ பட ‛டையலாக்’
இந்த பேட்டியின்போது நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‛புஷ்பா' பட டையலாக்கை கூறி பாஜகவினரை தெறிக்கவிட்டார். அதாவது ‛புஷ்பா' படத்தின் இந்தி ரீமேக்கில் ‛Jhukega nahi' (I Will Not Bow Down, நான் யாருக்கும் தலை வணங்கமாட்டேன்) என்ற டைலாக் இடம்பெற்றிருந்தது. இதை ஜிக்னேஷ் மேவானி கூறினார். அதாவது, ‛புஷ்பா படத்தில் கூறுவது போன்று நான் யாருக்கும் தலைவணங்கமாட்டேன். உண்மையின்பக்கம் இருப்பேன்' என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications