குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்து: "ஒருபக்கம் வலி.. ஒருபக்கம் கடமை.." பிரதமர் மோடி உருக்கம்!
அகமதாபாத்: சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்தால் வலியால் இதயம் கனக்கிறது என்றும் மற்றொரு பக்கம் கடமையின் பாதை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் மச்சு ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் நேற்று அறுந்து விழுந்தது.
இந்த பயங்கர விபத்தில் 141 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் இந்த துயர சம்பவம் ஏற்படுத்திவிட்டது.

வலியில் இதயம் கனக்கிறது
குஜராத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் வருத்தத்தையும் ஆழந்த இரங்கல்களையும் பதிவிட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் தனது வருத்தத்தை பதிவு செய்ததோடு, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று விரும்புவதாக கூறியிருந்தார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற இந்த துயரமான நிகழ்வால் கடும் வேதனை அடைந்துள்ள பிரதமர் மோடி, ஒருபக்கம் இதயம் வலியில் கனக்கிறது என்றும் இன்னொருபக்கம் கடமையின் பாதை அழைப்பதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு வேதனையை..
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று கேவடியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- "நான் ஏக்தா நகரில் இருக்கிறேன். ஆனால், எனது எண்ணம் எல்லாம் மோர்பியில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே உள்ளது. எனது வாழ்க்கையில் அரிதாகவே இப்படி ஒரு வேதனையை அனுபவித்து இருப்பேன்.

அரசு உறுதுணையாக இருக்கும்
அப்படி ஒரு வேதனை அளிக்கிறது. ஒருபக்கம் வலியால் இதயம் கனக்கிறது. இன்னொரு பக்கம் கடமையின் பாதை அழைக்கிறது. மோர்பி பாலம் சரிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக அனைத்து வழிகளிலும் அரசாங்கம் இருக்கும்" என்றார்.

ஒன்றுபட்டு நிற்க வேண்டும்
மேலும் பிரதமர் மோடி கூறுகையில், "இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த துயரமான நேரத்தில் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் கடும் சவாலை சந்தித்த சர்தார் படேலிடம் இருந்து உத்வேகத்தை கற்றுக்கொள்ள வேண்டும். பாலம் சரிந்து விழுந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் கூட அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். காயம் அடைந்தவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என்றார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சர்தார் வல்லபயாய் படேலின் பிறந்ததினத்தை ஒட்டி 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உலகின் மிக உயரமான இந்த சிலைக்கு ஒற்றுமை சிலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications