ஹஜ் கூட்டநெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 74க உயர்வு
டெல்லி: ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உலக முஸ்லீம்கள் புனித ஹஜ் பயணத்தை கடந்த மாதம் மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மினா நகரில் ஹஜ் யாத்ரீகர்கள் கூடினர். அவர்கள் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கிற்காக அங்கு கூடினர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
Haj stampede - Saudi Arabia has released a further list. The Indian toll is now 74.
Pl RT http://t.co/ji93Msbi30
— Sushma Swaraj (@SushmaSwaraj) October 6, 2015
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஹஜ் கூட்டநெரிசல்- சவுதி அரேபியா மேலும் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஹஜ் கூட்டநெரிசலில் சிக்கி மாயமான இந்தியரக்ளின் உறவினர்கள் வந்தால் மொசைம் பிணவறைக்கு அழைத்துச் சென்று காண்பிப்பதாக ஜெத்தாவில் உள்ள இந்திய கன்சுல் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
சவுதி அதிகாரிகள் பலியானவர்களின் பெயர்கள் மற்றும் நாட்டின் விபரங்களை மட்டுமே தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் இருக்கும் 40 பெயர்கள் மாயமான இந்தியர்களின் பெயர்களோடு ஒத்துப் போகிறது.
மாயமான யாத்ரீகர்களின் உறவினர்கள் மெக்கா, ஜாராவல்வில் உள்ள ஹஜ் கமிஷன் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு செல்லலாம். அல்லது 00966125606368 என்ற கட்டுப்பாட்டு அறையின் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.