Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

த்ரில்லர் படங்களுக்கு ஈடானது.. மேகாலயாவில் ஹனிமூனில் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

ஷில்லாங்: இந்தூர், மேகாலயா, காஜிபூர் என மூன்று மாநிலங்களை உலுக்கியிருக்கும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு, ஒரு கொடூரமான சதித்திட்டத்தின் அடுக்கடுக்கான உண்மைகளை வெளிப்படுத்தி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு அழகான தேனிலவுப் பயணம், கணவனைக் கொன்ற கொடும் குற்றச்சாட்டுடன் முடிந்து, மனைவி சோனம் ரகுவன்ஷி காவல்துறையிடம் சரணடைந்திருக்கிறார்.

மே 10, அன்று, இந்தூரைச் சேர்ந்த 29 வயதான ராஜா ரகுவன்ஷிக்கும், இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷிக்கும் வெகு விமர்சையாகத் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன பத்தே நாட்களில், தேனிலவுக்குத் திட்டமிட்டனர்.

Meghalaya Hanymoon

மே 20 அன்று இந்தூரிலிருந்து புறப்பட்ட ராஜா ரகுவன்ஷியும் சோனமும், காமாக்யா கோயில் செல்வதாகத்தான் வீட்டில் கூறியிருந்தனர். ஆனால் அதற்கு பதிலாக மேகாலயாவின் அடர்ந்த காட்டுப் பகுதியான மாவலாகியாத் கிராமத்தில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேயில் மே 22 அன்று தங்கினர். ராஜாவின் தாயார், மருமகள் சோனத்துடன் தொலைபேசியில் பேசியபோது, "அங்கே மேலே பார்ப்பதற்கு என்ன இருக்கிறது, ஏன் அங்கே சென்றீர்கள்?" என்று கேட்டு, அங்கு செல்ல வேண்டாம் என்றும் தடுத்திருக்கிறார். காமாக்யா கோவில் என்று கூறிவிட்டு, மேகாலயாவுக்குச் சென்றதும் ராஜாவின் குடும்பத்தினரை குழப்பத்தில் ஆழ்த்தியது, சந்தேகத்தின் முதல் விதை இங்கேதான் விழுந்தது.

மே 22 அன்று, சோனமும் ராஜாவும் ஸ்கூட்டியில் வெளியே புறப்பட்டுச் சென்றனர், ஆனால் திரும்பி வரவில்லை. அவர்கள் காணாமல் போன செய்தி கிடைத்ததும், மேகாலயா காவல்துறை தேடலைத் தொடங்கியது. அவர்கள் சென்ற ஸ்கூட்டி, ஷில்லாங்கிலிருந்து சோஹ்ரா செல்லும் வழியில், சம்பவ இடத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கஃபேக்கு வெளியே அனாதையாகக் கிடந்தது.

காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் இணைந்து காடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, ஷில்லாங்கிலிருந்து சோஹ்ரா பகுதியில் ஒரு பள்ளத்தாக்கிலிருந்து ராஜா ரகுவன்ஷியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்திற்கு அருகில் ஒரு பெண்ணின் வெள்ளை சட்டை, ஒரு மாத்திரை ஸ்டிரிப், உடைந்த மொபைல் ஸ்கிரீன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. ஆரம்பகட்ட விசாரணையில், பள்ளத்தாக்கில் விழுந்து இறந்திருக்கலாம் என மேகாலயா காவல்துறை சந்தேகித்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபோது, கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது ஒரு விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பது உறுதியானது. இந்தத் தருணத்திலிருந்து, மேகாலயா காவல்துறை மற்றும் மத்தியப் பிரதேச காவல்துறை இருவரும் விசாரணையில் தீவிரமாக இறங்கினர்

மர்மமான மனைவியின் மறுவருகை

மேகாலயா போன்ற மலைப்பாங்கான மாநிலத்தில், தேனிலவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் தம்பதியில் கணவனின் உடல் கிடைத்து, மனைவி காணாமல் போயிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு மாநிலக் காவல்துறையும் பணியாற்றியும், சோனத்தின் இருப்பிடம் உடனடியாகத் தெரியவில்லை. வழக்கு நாடு முழுக்க பேசப்பட்டதும், இறந்தவரின் குடும்பத்தினரும், மத்தியப் பிரதேச அரசியல் தலைவர்களும், இந்தக் கொடூரமான குற்றத்திற்கு நீதி கோரி சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர். ராஜா ரகுவன்ஷியின் உடல் இந்தூருக்குக் கொண்டுவரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

ராஜா எப்படி இறந்தார் என்று அவரது குடும்பத்தினர் தவித்தனர். சோனம் எங்கே காணாமல் போனார் என்று அவரது குடும்பத்தினர் கலங்கினர். இந்தக் குழப்பமான சூழலில், மேகாலயா காவல்துறை ஒரு முக்கிய தகவலை வெளியிட்டது: சம்பவ இடத்திற்கு அருகில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய, கூர்மையான ஆயுதம் கிடைத்தது. அதை மேலும் ஆய்வு செய்தபோது, அந்த ஆயுதம் புத்தம் புதியதாக இருந்தது, கொலைக்காகவே வாங்கப்பட்டது எனப் புலனாய்வு வெளிப்படுத்தியது. இது, கொலை ஒரு திட்டமிட்ட செயல் என்பதை மேலும் உறுதிப்படுத்தியது.

இந்தூரில், சோனத்தின் குடும்பத்தினர், வட மாநிலங்கள் சிலவற்றில் பின்பற்றும் ஒரு சடங்கை செய்தனர். அதாவது காணாமல் போனவர் திரும்பி வர வேண்டும் என்ற நம்பிக்கையில், தங்கள் வீட்டில் சோனம் புகைப்படத்தை தலைகீழாக தொங்கவிட்டனர். இது போல செய்வது, சோனம் திரும்பி வர உதவும் என்று நம்பப்பட்டது. இறுதியில், சோனமும் திரும்பினார். ஆனால், அவர் திரும்பியபோது, வழக்கும் அவர் புகைப்படத்தை போல தலைகீழாக திரும்பியது.

உத்தரப் பிரதேச காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த சோனம், மேகாலயாவில் நடந்த குற்றத்தைப் பற்றி எந்த விசாரணையும் எதிர்கொள்ளவில்லை. குற்றம் நடந்தது மேகாலயா என்பதால், உ.பி. காவல்துறை சோனத்தை விசாரிக்கவில்லை. இந்த சட்ட நுணுக்கங்கள் தெரிந்துதான் சோனம் உ.பி.யில் சிக்குவதை போல சிக்கியிருந்தார். அப்போது, மேகாலயா காவல்துறை ஒரு முக்கியமான தகவலை அம்பலப்படுத்தியது: இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியின் கொலைக்குப் பின்னால் சோனம் ரகுவன்ஷி இருக்கலாம், ஏனெனில் சோனம் ரகுவன்ஷிக்கு ராஜ்குஷ்வாஹா என்ற இளைஞனுடன் நீண்டகால காதல் உறவு இருந்தது என்பதுதான் அந்த தகவல். இது வழக்கில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

மேகாலயா காவல்துறை, அனைத்து விசாரணைகளுக்குப் பிறகு, கள்ளக்காதல் காரணமாகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று வலுவாக சந்தேகித்தது. ராஜாவின் தாயார், "முதலில் இருந்தே சந்தேகம் இருந்தது" என்று தனது ஆரம்பகால சந்தேகங்களை உறுதிப்படுத்தினார். ராஜாவின் சகோதரர், "முதலில் சோனம் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று ஆவேசமாகக் கோரினார். சோனத்தின் தந்தை, "சிபிஐ விசாரணை நடத்துங்கள்" என்று தனது மகளுக்கு நீதி கோரினார். சோனமோ உ.பி.யில் கண்டுபிடிக்கப்பட்டபோது சோர்வாகவும், அமைதியாகவும் இருந்தார்.

இந்தூர், மேகாலயா, உத்திரபிரதேசம் என மூன்று மாநிலக் காவல்துறையினரும் இந்த வழக்கை இணைந்து விசாரித்து வருகின்றனர். இரண்டு பேர் இந்தூரிலிருந்தும், ஒருவர் உ.பி.யிலிருந்தும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது, மூன்று மாநிலக் காவல்துறையும் ஒரே ஒரு முக்கியமான நபரைத் தேடி வருகிறது. அவர் தான் சோனத்தின் கள்ளக்காதலன் ராஜ்குஷ்வாஹா.

வழிகாட்டியின் வாக்குமூலம்

இந்த வழக்கில் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஆல்பர்ட் வாக்குமூலம் மிக முக்கியமானதாக அமைந்தது. மே 23 அன்று சோனம் மற்றும் ராஜாவை, மேலும் மூன்று ஆண்களுடன் மலையேற்றத்தில் கண்டதாக ஆல்பர்ட் கூறினார். அவரைப் பொறுத்தவரை, அந்த மூன்று ஆண்கள் முன்னால் சென்றனர், சோனம் பின்னால் இருந்தார். அவர்கள் இந்தியில் பேசிக்கொண்டிருந்தனர், ஆனால் ஆல்பர்ட் காசி மற்றும் ஆங்கிலம் மட்டுமே புரிந்துகொள்வதால், அவர்களது உரையாடலின் நோக்கத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மே 22 அன்று, ஆல்பர்ட் தம்பதிக்கு மலையேற்ற சேவையை வழங்கியுள்ளார், ஆனால் சோனம் மற்றும் ராஜா அதை மறுத்துவிட்டனர், மேலும் அவர்கள் ஏற்கனவே 'பா வான்சாய்' (Bha Wansai) என்ற வழிகாட்டியை அமர்த்தியிருப்பதாகவும், ஷிபாரா ஹோம்ஸ்டே' (Shipara Homestay)யில் தங்கியிருப்பதாகவும் கூறினர். ஆனால், வழிகாட்டி ஆல்பர்ட் சொல்வதன்படி, மே 23 அன்று காலை தம்பதி மலை ஏறும் போது, அவர்களுடன் எந்த வழிகாட்டியும் இல்லை. இது, அந்த மூன்று பேர் யார் என்ற கேள்வியை எழுப்பியது, சதித்திட்டத்தின் இருப்பை மேலும் உறுதிப்படுத்தியது.

ராஜ்குஷ்வாஹா நேரடியாக ஷில்லாங்கிற்கு வரவில்லை. அவர் தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பில் இருந்து, கூலிப்படையை அமர்த்தியிருக்கிறார். மூன்று கூலிப்படையினர், ஷில்லாங்கில் இருந்தனர்.

திட்டப்படி, அனைவரும் சிரபுஞ்சிக்குச் சென்றனர். சோனம், ராஜா ரகுவன்ஷியை வேண்டுமென்றே ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பாதைக்கு அழைத்துச் சென்றார். அங்கே, அந்த மூன்று கூலிப்படையினரும் இணைந்து ராஜாவைக் கொடூரமாகக் கொலை செய்தனர். கொலையை முடித்த பிறகு, ஆகாஷ், விஷால், ஆனந்த் மற்றும் சோனம் அனைவரும் ஷில்லாங்கிலிருந்து குவஹாத்திக்குச் சென்றனர். குவஹாத்தியில் ஒரு நாள் தங்கிவிட்டு, அங்கிருந்து தனித்தனியாகப் பிரிந்து தலைமறைவாகினர்.
போலீஸ் விசாரணையில் சோனத்தின் செல்போன் அழைப்பு விவரங்கள், அவர் ராஜ்குஷ்வாஹாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததையும், இருவருக்கும் இடையே நீண்டகால கள்ளக்காதல் உறவு இருந்ததையும் வெளிப்படுத்தியது.

இந்தத் தகவல்களின் அடிப்படையில், காவல்துறை முதலில் லலித்பூருக்குச் சென்று ஆகாஷ் ராஜ்புத்தை கைது செய்தது. அதன் பிறகு, விஷால் மற்றும் ராஜ்குஷ்வாஹா ஆகியோர் இந்தூரிலிருந்து கைது செய்யப்பட்டனர். சோனம், காஜிபூரில் சரணடைந்தார். ஐந்தாவது குற்றவாளியான ஆனந்த் சாகரில் கைது செய்யப்பட்டார்.

மொத்தம் 5 பேர் இந்தக் கொடூரக் கொலையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஷில்லாங்கிற்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, விசாரணைக்காக காவலில் எடுக்கப்படுவார்கள். இந்தக் கொடூரமான சதித்திட்டத்தின் முழுமையான விவரங்கள் வெளிவரும் போது, மேலும் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. ராஜாவின் குடும்பம் தங்கள் மகன் ராஜாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+