தேச விரோத வழக்கில் ஹர்த்திக் பட்டேலுக்கு ஜாமீன்.. 6 மாதங்களுக்கு குஜராத்திற்குள் நுழைய முடியாது
அகமதாபாத்: குஜராத்துக்குள் ஆறு மாத காலம் வரக் கூடாது என ஹர்திக் பட்டேலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி குஜராத் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடுக்காக போராடி வருபவர், பட்டிதார் அனாமத் அன்டோலன் சமிதி தலைவர் ஹர்திக் பட்டேல். இவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 9 மாதங்களாக சிறையில் உள்ளார்.

இந்நிலையில், குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஹர்திக் பட்டேல் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், குஜராத்துக்குள் ஹார்த்திக் பட்டேல் ஆறு மாத காலம் வரக் கூடாது என்று கூறி நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
இரண்டு தேச துரோக வழக்குகளில் ஹர்திக் பட்டேலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை சூறையாடிய மற்றொரு வழக்கில் அவர் ஜாமீன் கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை வருகிற திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. அதிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டால் ஒன்பது மாதங்களுக்கு பின்னர், அவர் சிறையில் இருந்து விடுதலையாவார்.
தான் விடுவிக்கப்பட்டால், அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று ஹர்திக் தரப்பில் ஹைகோர்ட் விசாரணையின்போது கூறப்பட்டது. ஹர்த்திக் அமைதியான போராட்டம் நடத்தமாட்டார் என்பது அரசு தரப்பு வாதமாக இருந்தது. இந்நிலையில், அவர் 6 மாத காலம் குஜராத்திற்குள் வரக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications