ஹரியானா தேர்தல்: பாஜகவுக்கு தாவும் வதந்திகளுக்கு ஃபுல் ஸ்டாப்! பிரசாரத்தில் குமாரி செல்ஜா விளாசல்!
சண்டிகர்: ஹரியானா மூத்த காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவை ஓரம் கட்டிவிட்டனர்; குமாரி செல்ஜா பாஜகவில் இணையப் போகிறார் என பாஜகவினர் பரப்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர்கள் தமக்கு அறிவுரை கூற தேவை இல்லை; காங்கிரஸ் கட்சியில் எந்த ஒரு அதிருப்தியிலும் தாம் இல்லை என குமாரி செல்ஜா பதிலடி கொடுத்துள்ளார்.
ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறுகிறது. ஹரியானா தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலையை எளிதாக அறுவடையை செய்து வெல்ல முடியும் என்பது காங்கிரஸ் கணக்கு. ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ ஆளுக்கு ஒரு பக்கம், முதல்வர் பதவிக்காக முட்டி மோதிக் கொண்டுள்ளனர். ஹரியானா காங்கிரஸ் முகங்களில் ஒருவரான குமாரி செல்ஜா திடீரென தேர்தல் களத்தில் இருந்து மாயமானார். இதனால் தலித்தான குமாரி செல்ஜாவை காங்கிரஸ் ஓரம்கட்டி புறக்கணித்துவிட்டது; விரைவில் பாஜகவில் குமாரி செல்ஜா சேருவார் என தீவிரமாக பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
இதனால் ஹரியானா தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் திடீரென ஹரியானவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து குமாரி செல்ஜா நேற்று முதல் பிரசாரம் செய்து வருகிறார். மேலும், பாஜக தலைவர்கள் யாரும் எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. காங்கிரஸ் கட்சியில் எனக்கு எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் நன்மைக்காக சில விவாதங்கள் நடைபெறும்; முடிவுகள் எடுக்கப்படும். அதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்லவும் முடியாது என பதிலடி கொடுத்தார். இதனால் குமாரி செல்ஜா, பாஜகவுக்கு தாவக் கூடும் என்கிற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் ஹரியானா தேர்தல் குறித்து பதிவிட்டுள்ளதாவது: பா.ஜ.க பரப்பிய 'வேலையில்லாத் திண்டாட்டத்தின்' விலையை லட்சக்கணக்கான குடும்பங்கள் அனுபவிப்பதுடன், தங்கள் அன்புக்குரியவர்களிடம் இருந்து விலக்கி வைக்கிறது.
எனது அமெரிக்கப் பயணத்தின் போது, குடும்பம் மற்றும் வீட்டை விட்டு வெளிநாட்டில் நேரத்தைக் கழிக்கும் ஹரியானா இளைஞர்களைச் சந்தித்தேன்.
இந்தியா திரும்பிய பின் அவரது குடும்பத்தினரை நான் சந்தித்தபோது, அவர்களின் கண்கள் வலியால் நிறைந்தன. வாய்ப்புகள் இல்லாதது குழந்தைகளை அவர்களின் தந்தையிடமிருந்தும், முதியவர்களிடமிருந்தும் அவர்களின் முதுமையின் ஆதரவிலிருந்தும் பிரிக்கிறது.
10 ஆண்டுகளில், ஹரியானா உட்பட நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் இருந்து வேலை வாய்ப்பைப் பறித்து அவர்களுக்கு பாஜக கடும் அநீதி இழைத்துள்ளது. உடைந்த நம்பிக்கையும் தோற்கடிக்கப்பட்ட மனமும் இளைஞர்களை 'சித்திரவதைப் பயணத்தை' மேற்கொள்ளத் தூண்டுகிறது. இந்த புலம்பெயர்ந்த பறவைகளுக்கு, தங்கள் வீடுகளை விட்டுப் பிரிந்தவர்களுக்கு, தங்கள் சொந்த நாட்டில், தங்கள் அன்புக்குரியவர்களிடையே வாழ்வாதாரத்தைப் பெற வாய்ப்பு கிடைத்தால், அவை ஒருபோதும் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறாது. காங்கிரஸ் அரசு அமைந்தவுடன், இளைஞர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க தங்கள் அன்புக்குரியவர்களை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டிய அவசியமில்லாத அமைப்பை ஹரியானாவில் உருவாக்குவோம் என்பதே எங்கள் உறுதி. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications