ராம் ரஹிம் ஆதரவாளர்கள் நிகழ்த்திய வெறியாட்டம்.. கலவரத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 31 பேர் சாவு
டெல்லி: பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியானாவில் அந்த அமைப்பினர் பெரும் வன்முறைகளில் ஈடுபட்டனர்.
குறிப்பாக ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா நகரில் வன்முறை உச்சம் தொட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய துணை போலீஸ் கமிஷனர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வன்முறையில் 31 பேர் பலியாயினர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ராம் ரஹிமின் இரு ஆசிரமங்களை ராணுவம் சீல் வைத்துள்ளது.
ஹரியானா அரசு வன்முறையாளர்களிடம் சரண் அடைந்துவிட்டதாக ஹைகோர்ட் கடுமையாக சாடியுள்ளது.
ஹரியானா தலைமைச் செயலாளர் தீபிந்தர் சிங் கூறுகையில், பஞ்ச்குலா நகரில் 24 ஆண்களும், 3 பெண்களும், ஒரு குழந்தையும் கொல்லப்பட்டதாகவும், சிர்சா நகரில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் ஆக மொத்தம் 31 பேரை இக்கலவரம் பலிவாங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.