IND vs PAK T20 கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் சுவாரசியமான வரலாறு
மார்ச் 30 , ஆண்டு 2011. சண்டிகர் விமான நிலையத்தில் காலை 6 மணி முதல் எல்லா பயணிகள் விமான சேவையும் நிறுத்தப்பட்டன. சுகோய் - 30 போர் விமானங்கள் அடிக்கடி வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
நகரின் முக்கிய சாலைகளில் காவல்துறையுடன் கூடவே பாதுகாப்புப் படைகளும் நிறுத்தப்பட்டன. மேலும் மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியம் முதன்முறையாக ராணுவச் சாவடி போல மாறியது.
சூழ்நிலை அப்படிப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதி, அதுவும் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானியும் இஸ்லாமாபாத்தில் இருந்து போட்டியைக் காணவும், மன்மோகனை அங்கு சந்திக்கவும் இந்தியா வந்தார்.
2007 டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் மோதிய ஆட்டத்தின் நினைவுகள் அனைவர் மனதிலும் பசுமையாக இருந்தன. இந்தியா அதில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
மொஹாலி போட்டியின் செய்தியை வழங்க அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடமும் ஓர் இனம்புரியாத பதற்றம் காணப்பட்டது. இவ்வளவு பெரிய போட்டி, கூடவே தூதாண்மை நடவடிக்கைகள் பற்றியும் செய்தியில் எழுதவேண்டும்.
காலிறுதியில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்தது. குஜராத்தில் உள்ள மோடேரா விளையாட்டரங்கில் அந்த போட்டியை கவர் செய்த பிபிசி செய்தியாளர் முகேஷ் ஷர்மா, "கவனித்துக்கொள்ளுங்கள், மொஹாலியிலும் இது தொடரவேண்டும்," என்று தொலைபேசியில் கூறினார்.
- டி 20 உலகக் கோப்பை: கோலி சிறப்பாக பிரியாவிடை பெற வரலாறு வழங்கும் வாய்ப்பு
- டி20 உலக கோப்பை - எத்தனை ஆட்டங்கள், யாருடன் மோதுகிறது இந்தியா?
பிபிசி ஹிந்தியின் கவரேஜ் பொறுப்பு பங்கஜ் பிரியதர்ஷி மற்றும் வந்தனா ஆகியோரின் கைகளில் இருந்தது. "அப்டேட் கொடுக்க தவறாதீர்கள்," என்று ஒருவர் கூற, "என் ஊரில் இருக்கிறீர்கள்., வெறுங்கையுடன் திரும்பி வராதீர்கள்," என்று மற்றொருவர் சொன்னார்.
உலகின் எல்லா முன்னணி கிரிக்கெட் செய்தியாளர்களும் இந்த போட்டிக்கு வந்திருந்தனர். இது சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக் கோப்பை ; யுவராஜ் சிங் முதல் கோலி , கம்பீர் வரை அனைவருமே, 'இந்த முறை சச்சினுக்காக கோப்பையை வெல்ல வேண்டும்' என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, போட்டிக்கு முன், "நாங்களும் இந்தப்போட்டியில் உயிரைக்கொடுத்து விளையாடுவோம்," என்று கூறினார்.
முதலில் மட்டைவீசிய இந்திய அணி சச்சினின் 85 ரன்களின் மூலம் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் பீல்டர்கள் சச்சினின் நான்கு கேட்சுகளை தவறவிட்டது அவரது அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.
இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி இலக்கை எட்ட 29 ரன்கள் மீதமிருந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் அனைவரையும் ஆட்டமிழக்கச்செய்தனர். ஜாகீர், நெஹ்ரா, முனாஃப் படேல், ஹர்பஜன், யுவராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த தோல்விக்கு ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் அஃப்ரிடி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட்டார். அதன் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு சச்சினும், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.
2012 டி20 உலகக் கோப்பை- இலங்கை
முந்தைய போட்டிக்குப் பிறகு அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் குரூப் ஆட்டத்தில் இரு அணிகளும் சந்தித்தன.
கொழும்பின் பிரேமதாசா மைதானம் மக்கள் வெள்ளமாக காட்சி தந்தது. காலையில் இருந்தே நகரம் முழுவதும் உள்ள சாலைகளில் ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக பார்வையாளர்களும், ஊடகவியலாளர்களும் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்தே அரங்கத்தை அடையவேண்டியிருந்தது.
போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக, கொழும்பில் உள்ள மற்றொரு மைதானமான 'பி சாரா ஓவல்' மைதானத்தில் இந்திய அணி நெட் பிராக்டீஸ் செய்தது. பயிற்சியின் போது, வீரேந்தர் சேவாக் வலையில் பேட் செய்யாததால் சிறிது பதற்றம் ஏற்பட்டது. பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங்கின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பினர். அவர் ஒரு தீவிர நோய்க்கு சிகிச்சை பெற்று அணிக்கு திரும்பியிருந்தார்.
முழுப் போட்டிகளிலும், முந்தைய உலகக் கோப்பையில் காணப்பட்ட ஏதோ ஒன்றை இந்திய அணியிடம் நான் பார்க்கவில்லை. ஆனால், இந்தியா-பாகிஸ்தான் போட்டி தனித்துவமானது.
போட்டிக்கு முந்தைய நாள், போட்டியை நேரில் கண்டு செய்தியளிக்க வந்துள்ள எல்லா பத்திரிகையாளர்களும் அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் (இப்போதைய பிரதமர்) இல்லத்திற்கு இரவு உணவிற்கு அழைக்கப்பட்டனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான ரமீஸ் ராஜாவும் அங்கு வந்திருந்தார். உரையாடலின் போது, "இந்த முறை பந்துவீச்சுடன் கூடவே பேட்டிங்கிலும் கவனம் செலுத்துங்கள். மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இம்ரான் நசீர், கேப்டன் முகமது ஹஃபீஸ் மற்றும் நசீர் ஜாம்ஷெட் இந்த வடிவத்தின் பெரிய வீரர்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், இந்த மூன்று வீரர்களில் யாருமே இப்போட்டியில் பெரிதாக பேட் செய்யாமல் போனதால், பாகிஸ்தான் அளித்த 128 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா 17 ஓவர்களிலேயே எட்டியது. விராட் கோலி 78 ரன்கள் குவித்து ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
2015 ஒரு நாள் உலகக் கோப்பை - ஆஸ்திரேலியா
கிரிக்கெட் அமைப்பாளர்களும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின் பரபரப்பு மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளின் முதல் பந்தயம் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள், சர் டான் பிராட்மேனின் நகரமான அடிலெய்டில் குவிந்தனர். அங்கு திருவிழா போன்ற சூழல் இருந்தது. நாங்கள் தங்கியிருந்த நகரத்தின் மைய வணிகப்பகுதியில் வாழும் மக்கள், இரவு பன்னிரெண்டு மணிக்கு தெருக்களில் 'சக் தே இந்தியா' பாடலுக்கு ஆட்கள் நடனமாடுவதை முதல் முறையாக பார்த்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பாகிஸ்தானின் ஆதரவாளர்களும் அமெரிக்காவிலிருந்தும் துபாயிலிருந்தும் அங்கு வந்திருந்தனர். கொண்டாட்ட சூழ்நிலையில், சாலையோர பார்-உணவகங்கள் காலையில் இருந்தே நிரம்பி வழிந்தன.
ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் செய்தியை வழங்குவது தனித்துவமான ஒன்று. அணிகள் வெவ்வேறு மைதானங்களில் நெட் பயிற்சியை மேற்கொள்ளும். அங்கு வீரர்களை நன்கு தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஒரு சிறப்பு வாய்ப்பு கிடைக்கும். மேலும் முன்னோக்கிய அவர்களது உத்தியையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்து பெரிய இலக்கை நிர்ணயிக்கலாம் என்று இந்தியா ஏற்கனவே நினைத்திருக்கலாம்.
விராட் கோலியின் சதம் மற்றும் ஆடுகளத்தில் ஷிகர் தவான் அளித்த ஆதரவு காரணமாகவும், பாகிஸ்தான் அணிக்கு 301 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய பந்துவீச்சை கண்டிப்பாக பாராட்ட வேண்டும், குறிப்பாக முகமது ஷமி, அந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக பாகிஸ்தான் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
2016, டி20 உலகக் கோப்பை- இந்தியா
20-20 உலகக் கோப்பை இந்தியாவில் இதற்கு முன்பு நடந்ததில்லை. அதே நேரத்தில் ஐபிஎல்லின் தோற்றமும் பிரபலமும் இந்த நாட்டிலிருந்துதான் தொடங்கி வளர்ந்தது. போட்டி இங்கு நடைபெற்றபோது வெற்றியின் நம்பிக்கையுடன் இருநாட்டு ரசிகர்களும், இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
குரூப் 10 போட்டியில், இரு அணிகளும் பெயர் பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் சந்திக்கவிருந்தன.. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி அப்போது மேற்கு வங்க கிரிக்கெட் நிர்வாகத்தில் இருந்தார். மேலும் போட்டி ஏற்பாடுகளின் பொறுப்பு அவரிடம் இருந்தது.
ஈடன் கார்டனில், 'தாதா' மீது மக்களுக்கு இருந்த ஈர்ப்பு அலாதியானது. போட்டிக்கு ஒரு நாள் முன்பு, இரு அணிகளும் மைதானத்தின் இரு மூலைகளிலும் வலைப்பயிற்சி செய்து கொண்டிருந்தன. செளரவ் தனது சிவப்பு நிற மெர்சிடிஸ் காரை ஓட்டிக்கொண்டு மைதானத்தின் வெளிப்புற பகுதிக்கு வந்தார். அங்கிருந்த சுமார் 150 பார்வையாளர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள அவரை நோக்கி ஓடினர்.
வர்ணனைக் குழுவினர் - வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா, ஹர்ஷா போக்லே போன்றவர்களும் செளரவுடன் களத்திற்கு வந்து எல்லா வீரர்களையும் சந்தித்தனர். விராட் கோலியும், ரோஹித் ஷர்மாவும் நீண்ட நேரம் செளரவுடன் ஆடுகளத்தை ஆய்வு செய்தனர்.
போட்டி தொடங்குவதற்கு முன், நடிகர் அமிதாப் பச்சன் ஒரு லட்சம் பார்வையாளர்களுடன் தேசிய கீதத்தை பாட, சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைவரும் ஸ்டாண்டில் இருந்து உடன் பாடினர்.
மழை காரணமாக போட்டி 18-18 ஓவர்களாக குறைக்கப்பட்டன. முதலில் மட்டை வீசிய பாகிஸ்தான், இந்தியாவுக்கு 119 ரன்கள் என்ற வெற்றிஇலக்கை நிர்ணயித்தது.
இம்முறையும், விராட் கோலி ஒரு விறுவிறுப்பான இன்னிங்ஸை விளையாடி, 37 பந்துகளில் 55 ரன்களைக்குவித்தார். இந்தியா இரண்டு ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. விராட் கோலி மீண்டும் ஒருமுறை ஆட்டநாயகன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு - முழு விவரம்
- ஆஸ்கார் விருதுக்கு செல்லும் 'கூழாங்கல்' சினிமா எப்போது ரிலீஸ் ஆகும்? இயக்குநர் தகவல்
- தமிழ் இளைஞர்களை பொது இடத்தில் மோசமாக தாக்கிய இலங்கை போலீஸ்காரர் கைது
- மனிதருக்கு பன்றி சிறுநீரகம்: அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை
- 'டெல்டா பிளஸ்' புதிய கொரோனா திரிபு அதிவேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்