சபாஷ்! இதுதான் இந்தியா.. அப்பாவின் கடைசி ஆசை.. மசூதி கட்ட நிலம் கொடுத்து உதவிய இந்து சகோதரிகள்
டேராடூன்: நாட்டில் வகுப்புவாத வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் மத ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்து சகோதிரிகளின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் மத ரீதியான பேச்சுக்களும் மோதல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சிலர், தங்களின் லாபத்திற்காக இதுபோன்ற மத மோதல்களைத் தூண்டிவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில் உத்தரகண்ட் மாநிலத்தில் உயிரிழந்த தங்கள் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், இரண்டு இந்து சகோதரிகள் ₹ 1.5 கோடி மதிப்புள்ள இடத்தை இலவசமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
உத்தரகண்ட்
உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் காஷிபூர். இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தவர் தான் பிரஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகி. விவசாய தொழில் செய்து வந்த பிரஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகி, 20 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இருப்பினும் உயிரிழக்கும் முன்பு, தனது விவசாய நிலத்தில் 2.47 ஏக்கர் நிலத்தை மசூதி விரிவாக்கத்திற்கு நன்கொடையாக வழங்க விரும்புவதாகத் தனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடைசி ஆசை
இருப்பினும், அவர் தனது கடைசி ஆசையைத் தனது குழந்தைகளிடம் தெரிவிக்கும் முன்பு, அவர் எதிர்பாராத விதமாகக் கடந்த ஜனவரி 2003இல் உயிரிழந்தார். டெல்லி மற்றும் மீரட்டில் வசித்து வரும் அவரது இரு மகள்கள் சரோஜ் மற்றும் அனிதா ஆகியோருக்கு தங்கள் தந்தையின் கடைசி ஆசை குறித்து உறவினர்கள் மூலம் சமீபத்தில் தான் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக காஷிபூரில் வசிக்கும் அவர்களது சகோதரர் ராகேஷ் ரஸ்தோகியை தொடர்பு தந்தையின் கடைசி ஆசை குறித்த விவரத்தைத் தெரிவித்துள்ளனர்.
ரூ 1.5 கோடி மதிப்புள்ள இடம்
தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற ராகேஷ் ரஸ்தோகியும் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அந்த இரு சகோதரிகளும், ₹ 1.5 கோடி மதிப்புள்ள 2.7 ஏக்கர் நிலத்தை மசூதி விரிவாக்கத்திற்கு நன்கொடையாக வழங்கினர். இது தொடர்பாக ராகேஷ் ரஸ்தோகி கூறுகையில், "தந்தையின் கடைசி ஆசைக்கு மதிப்பளிப்பது எங்கள் கடமையாகும். என் சகோதரிகள் அவரது ஆன்மா சாந்தியடையச் செய்யும் ஒன்றைச் செய்திருக்கிறார்கள்" என்றார்.
வகுப்புவாத வன்முறை
மசூதியின் ஈத்கா கமிட்டியின் ஹசின் கான் இது பற்றிக் கூறுகையில்"இரண்டு சகோதரிகளும் மத ஒற்றுமைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். ஈத்கா கமிட்டி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது" என்று தெரிவித்தார். நாட்டில் வகுப்புவாத வன்முறை சமீப ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்து - முஸ்லீம் ஒற்றுமையை உணர்த்தும் வகையிலான இந்த இரண்டு சகோதரிகளின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.