அடுத்தது ம.பி. சர்ச்சை-போபால் ஜாமியா மசூதிக்கு குறி... சிவன் கோவிலை இடித்து கட்டியதாக திடீர் புகார்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் ஜாமியா மசூதியும் சிவன் கோவிலை இடித்து கட்டியதாக திடீரென இந்துத்துவா அமைப்புகள் புகார் கூறியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
நாடு விடுதலைக்கு முன்னர் இருந்தே உ.பி. மாநிலம் அயோத்தி பாபர் மசூதி சர்ச்சை வெடித்தது. நாடு விடுதலைக்குப் பின்னரும் நீடித்தது பாபர் மசூதி விவகாரம். அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டுவிட்டது என்பது இந்துத்துவா அமைப்பினர் புகார். ஆகையால் பாபர் மசூதியை இடித்தே ஆக வேண்டும் என பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சக்திகள் தீவிர பிரசாரம் செய்தன. இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றன. 1992-ம் ஆண்டு அயோத்தி பாபர் மசூதியை இந்துத்துவா இயக்கத்தினர் இடித்தே தரைமட்டமாக்கினர். இதனால் நாடே பெரும் மதவன்முறைகளால் சூழப்பட்டு ரத்த ஆறு ஓடியது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் உச்சநீதிமன்றத் தலையீட்டால் ஒருவிதமான சமரச தீர்வு முன்வைக்கப்பட்டது. இப்போது அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதேபோல் நாட்டின் பல நினைவு சின்னங்கள், புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களும் முன்னர் இந்து ஆலயங்களாக இருந்தன என கூறப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
உ.பி. தாஜ்மஹாலும் இப்படி சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறது. இதேபோல் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள கியான்வாபி மசூதியும் பிரச்சனையில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் இப்போது போபால் ஜாமியா மசூதியை குறிவைத்துள்ளனர் இந்துத்துவா அமைப்பினர். ஜாமியா மசூதி முன்னர் இந்து ஆலயமாக இருந்ததாகவும் இந்து ஆலயம் இடிக்கப்பட்டுதான் ஜாமியா மசூதி கட்டப்பட்டதாகவும் இப்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஜாமியா மசூதியிலும் ஆய்வு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. போபாலின் முதல் பெண் நவாப் குத்துஸியா பேகத்தால் கட்டப்பட்டதுதான் இந்த மசூதி என்பது குறிப்பிடத்தக்கது.