குடிபோதையில் முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... கூலித் தொழிலாளி கைது
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு குமாரகிருபா ரோட்டில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் அலுவலக இல்லமான ‘கிருஷ்ணா' அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி அந்த இல்லத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாகவும், இன்னும் அரை மணி நேரத்தில் அது வெடித்துச் சிதறும் என்றும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து கிருஷ்ணா இல்லத்துக்கு மோப்ப நாய்களுடன் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அது வெறும் புரளி என்பது உறுதியானது.
இது குறித்து கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதலமைச்சரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை தேடிவந்தனர். மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் நம்பர் மூலம் மர்மநபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ராஜீவ் (41) என்ற கூலித் தொழிலாளி சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘சம்பவத்தன்று தான் குடிபோதையில் இருந்ததாகவும், அப்போது தெரியாமல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததாகவும்' ராஜீவ் தெரிவித்தார்.
கைதான ராஜூவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications