இனி ஏர்போர்ட்டில் சோனியா மருமகன் விசுக்கென்று போக முடியாது?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு அளித்திருந்த விமான நிலையங்களில் வரிசையில் நிற்காமல் செல்லும் சலுகையை வாபஸ் பெறுவது குறித்த விமான போக்குவரத்து துறையின் கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், தொழில் அதிபருமான ராபர்ட் வாத்ரா விமான நிலையங்களில் வரிசையில் நிற்காமல் செல்லும் சலுகையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் இந்த சலுகையை வாபஸ் பெறுமாறு கூறி மத்திய விமான போக்குவரத்து துறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது. ஆனால் உள்துறையிடம் இருந்து பதில் வராததால் தற்போது மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் விமான போக்குவரத்து துறையின் கடிதத்தை பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் வாத்ரா எந்த வித அரசு பொறுப்பிலும் இல்லாததால் விமான நிலையங்களில் அவருக்கு அளிக்கப்படும் சலுகையை ரத்து செய்வது தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாத்ரா முன்னாள் பிரதமரின் குடும்பத்தார் என்பதால் அவருக்கு டெல்லி கமாண்டோ போலீஸ் படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. 1989ம் ஆண்டு சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சிறப்பு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
1999ம் ஆண்டில் இந்த பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு சோனியா காந்தியின் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாலேயே அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பற்றி 2010ம் ஆண்டில் சட்டதிருத்தம் செய்யப்பட்டு சோனியாவின் பாதுகாப்பு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. ஆனால் சட்டப்படி அவரது பாதுகாப்பை 2 ஆண்டுகள் தான் நீட்டிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனியாவின் சிறப்பு போலீஸ் படை பாதுகாப்பு அவரது குடும்பத்தாருக்கும் பொருந்தும். அதனால் தான் வாத்ராவுக்கு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரை வாத்ராவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது அவரை 36 பேர் எந்நேரமும் பாதுகாத்து வருகிறார்கள்.
வாத்ராவுக்கு பல காலமாக இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளவருக்கு விமான நிலையத்தில் அளிக்கப்படும் சலுகையை வாபஸ் பெறலாமா என்பது உள்ளிட்டவை பற்றி உள்துறை அமைச்சகம் யோசித்து வருகிறது.
அரசு தொடர்பான பதவிகளில் இல்லாவிட்டாலும் மதகுருவான தலாய் லாமாவுக்கு விமான நிலையத்தில் சலுகை அளிக்கப்படுகிறதே என்று வாத்ரா கேட்கலாம். ஆனால் தலாய் லாமா திபெத்தில் இருந்து வெளியேறிய பிறகு அரசுக்கு தலைமை வகித்ததுடன் அவர் ஒரு மத குரு என்பதால் அவருக்கு அந்த சலுகை அளிக்கப்படுகிறது.