பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த கையோடு மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.21 உயர்வு
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட வேகத்தில் மானியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.21 உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.26ம் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவிப்பு வெளியிட்டன. புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
விலை உயர்வை அடுத்து சென்னையில் ரூ. 62.47க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.65.04க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று ரூ. 53.09க்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.55.44க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்ட சூட்டோடு மானியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.21 உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர விமான எரிபொருளின் விலை 9.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.