சசி வசதிக்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி ஹவாலா பணம் கைமாறியது எப்படி தெரியுமா?
சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ. 2 கோடி ஹவாலா மூலம் கைமாறியது உறுதியாகியுள்ளது. அதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பெங்களூரு: சசிகலாவிற்கு சிறையில் வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ. 2 கோடி ஹவாலா பணம் சிறை அதிகாரிகளுக்கு கைமாறியுள்ளது. இதற்கான ஆவணங்களும் வங்கிக்கணக்குகளும் சிக்கியுள்ளன.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் பரமேஸ்வரின் நண்பரும், தும்கூரில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒரு முக்கிய பிரமுகர் இந்த பணத்தை பெங்களூரு மற்றும் டெல்லி வழியாக ஹவாலா மூலம் அனுப்பியது தெரியவந்துள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் டிஜிபி சத்தியநாராயணராவுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.

வசதிகள் செய்தது உண்மை
ரூபாவின் இந்த குற்றச்சாட்டு நேற்று உறுதியானது. கர்நாடக சட்டசபையில் பொது கணக்கு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக், டி.ஐ.ஜி. ரேவண்ணா ஆகியோர் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது உண்மை தான் என்பதை ஒப்புக்கொண்டனர்.

5 தனி அறைகள்
சிறையில் சசிகலாவுக்கு விசேஷ சமையல் அறையுடன் 5 தனி அறைகள் உள்பட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன என்றும் அவர் தங்கி இருந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருந்தன என்றும் அவர்கள் கூறினார்கள்.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்
கர்நாடகவின் முன்னாள் உள்துறை அமைச்சரும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் மீது உள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சிக்கியது எப்படி
கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனின் நண்பர்களில் ஒருவரான பெங்களூருவை சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவரையும் டெல்லி போலீசார் பிடித்து விசாரித்தனர். அவருடன் பெங்களூருவை சேர்ந்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் அடிக்கடி போனில் பேசியது தெரிய வந்தது. இதனால் பிரகாஷை போலீசார் டெல்லி அழைத்து சென்று விசாரித்தனர்.

டெல்லி போலீஸ் விசாரணை
அப்போது அவர் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க பணம் கைமாறவில்லை என்றும், சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து அவரிடம் டெல்லி போலீசாரும் மத்திய உளவு பிரிவு மற்றும் உள்துறை அதிகாரிகளும் விசாரித்தனர்.

ரூ. 2 கோடி ஹவாலா பணம்
இந்த விசாரணையில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ. 2 கோடி ஹவாலா மூலம் கைமாறியது உறுதியானது. இந்த 2 கோடி ரூபாயை பரமேஸ்வரின் நண்பரும், கர்நாடக மாநிலம் தும்கூரில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஒரு முக்கிய பிரமுகர் இந்த பணத்தை பெங்களூரு மற்றும் டெல்லி வழியாக ஹவாலா மூலம் அனுப்பியதை பிரகாஷ் உளறினார்.

ஆவணங்கள் சிக்கின
இந்த பணம் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சிறை காவலர்கள் வரை வழங்கப்பட்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது. ஹவாலா பணம் பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஆவணமும் வங்கி கணக்கு விவரங்களும் தற்போது சிக்கியுள்ளன.

பிரகாஷ் மீதும் நடவடிக்கை
சிறையில் சசிகலாவை பிரகாஷ் சந்தித்து பேசிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. சிறையில் சசிகலாவை பரமேஸ்வரன் பிஏ பிரகாஷ் சந்தித்த தகவலை சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபாவும் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால் அடுத்த கட்டமாக பிரகாஷ் மீது நடவடிக்கைகள் பாயும் என்று கூறப்படுகிறது.

விசாரணை அறிக்கை
சசிகலாவுக்கு செய்யப்பட்ட சிறப்பு வசதிகள் மற்றும் சிறை விதிமுறை மீறல்கள் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார், பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ரவி, மைசூரு சிறை சூப்பிரண்டு ஆனந்த ரெட்டி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை பாயும்.
இவர்கள் முதல்கட்ட விசாரணை அறிக்கையை வருகிற திங்கட்கிழமை தாக்கல் செய்வார்கள் எனறு எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகு சிறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

எங்கே போய் எப்படி வந்தது
இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்றதாக புகார் எழுந்த வழக்கிற்காக விசாரணை நடைபெற்றதில் சசிகலாவிற்கு சிறையில் வசதி செய்து கொடுப்பதற்காக ரூ. 2 கோடி கைமாறிய தகவல் சிக்கியுள்ளது. பணம் இருந்தால் எதையும் எப்படியும் வளைக்கலாம் என்பது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications