ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான போர்: 'இணைந்த கைகளாகும்' இந்தியா- அமெரிக்கா!
டெல்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்படுவது உறுதியாகி உள்ளது. அதேநேரத்தில் ஈராக், சிரியாவுக்கு ராணுவத்தை அனுப்பாமல் உளவுத் தகவல்களை மட்டும் அமெரிக்காவுடன் பரிமாறிக் கொள்ள இந்தியா ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக், சிரியாவில் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய நாடு அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்கும் முக்கியமானது என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா கலந்து கொள்ள மறுத்த நிலையில் இந்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.
அமெரிக்காவின் தற்போதைய அறிக்கையின் மூலம், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் இந்தியாவும் கை கோர்க்க இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. இருப்பினும் ராணுவத்தை அனுப்பி உதவாமல் உளவுத் தகவல்களை பரிமாறுவதற்கு மட்டும் இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளன.
அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ்.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அரேபிய தீபகற்பத்தில் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கங்களுக்கு எதிரான யுத்தம் என்பது தங்களுக்கு மிகவும் முக்கியத்துவமானது என்று இந்தியாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு தகவல்கள்..
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைப் பொறுத்தவரையில் இந்திய துணைக் கண்டத்தில் ஆட்சேர்ப்பை மும்முரமாக்கியிருக்கிறது. இதனால் இந்திய உளவுத் துறையின் தகவல்களை அமெரிக்கா சார்ந்திருக்க வேண்டியதும் உள்ளது.
நிதி உதவி நாடுகள்..
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதி உதவி செய்யக் கூடிய பாகிஸ்தான் போன்ற நாடுகளைப் பற்றிய தகவல்களையும் இந்தியாவிடம் இருந்து பெற வேண்டிய நிலையில் அமெரிக்கா இருக்கிறது.
ஆப்கானை முன்வைத்து..
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா இரு இயக்கங்களுமே தலைவலியானவைதான்.. அதுவும் ஆப்கானிஸ்தானில் இனி வரப்போகும் மாதங்களில் அதிகார யுத்தத்தில் தீவிரவாத இயக்கங்கள் முனைப்பு காட்டும் என்பது இந்தியா எதிர்பார்க்கிற ஒன்றுதான்..
அல்கொய்தா
யேமனில் அல்கொய்தாவின் கை ஓங்கி இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் கால் பதித்து இந்திய துணைக் கண்டத்தில் நுழைவதற்கான வாய்ப்பாக அல்கொய்தா பார்க்கும். இதேபோல் ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கமும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கக் கூடும்.
இந்தியா
இந்த தீவிரவாத இயக்கங்களின் முனைப்புகளுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் அமைதியைக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. இதனால் அமெரிக்காவுடன் கை கோர்க்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு உள்ளது.
அமெரிக்காவின் உதவி
மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இந்திய இளைஞர்கள் உறுப்பினர்களாக இணைகின்றனர். இத்தகைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை கண்டறிந்து ஒடுக்குவதற்கு அமெரிக்காவின் உதவியும் இந்தியாவுக்கு தேவையாக இருக்கிறது.
ராணுவத்தை அனுப்பாது
இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரையில் ஈராக், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக ராணுவத்தை அனுப்பப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சென்ற போதும் கூட அந்நாட்டுடன் இணைந்து யுத்தம் நடத்த மறுத்திருந்தார். அப்படி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான போரில் இந்தியா இணைந்தால் நிறைய இளைஞர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்திருக்க வாய்ப்பு உண்டு. அதனால் அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்து ராணுவத்தை அனுப்ப இந்தியா மறுத்தது நல்ல முடிவுதான்!